Tindivanam constituency : திண்டிவனம் தொகுதியை கைப்பற்ற போட்டி போடும் திமுக நிர்வாகிகள்.! முந்தப்போவது யார்.?
தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக என இரு தரப்பும் மாறி மாறி வெற்றி பெற்று வரும் திண்டிவனம் தொகுதியில் திமுக சார்பாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்.? திமுக தலைமையின் முடிவு என்ன.?

சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர்களின் தேர்வையும் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. யாரை களத்தில் இறக்கினால் வெல்ல முடியும் என ரகசிய சர்வேக்களையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக சார்பாக எப்படியாவது சீட்டை பெற்று களம் இறங்க வேண்டும் என திமுகவினர் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
போட்டி போட்டு விருப்ப மனுக்களை வாங்கும் திமுகவினர்
ஏராளமான திமுகவினர் ஆர்வமாக விருப்பமனுக்களை பெற்று வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்காக மனுக்களை பெற்று திருப்பி வழங்கி வருகின்றனர்.இந்த நிலையில் திமுகவின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக திண்டிவனம் தொகுதி உள்ளது. எனவே இந்த தொகுதியை கைப்பற்ற வேண்டும் என திமுகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தையும் திண்டிவனத்தை குறிவைத்துள்ளது.
அந்த வகையில் திமுகவில் யார் யாருக்கு வாய்ப்புள்ளது என்பதை தற்போது பார்க்கலாம். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சீதாபதி சொக்கலிங்கத்திற்கு, கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக வேட்பாளர் அர்ஜூனனிடம் சுமார் 10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். எனவே இந்த முறை புதிய முகத்திற்கு வாய்ப்பு வழங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திண்டிவனம் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு.?
அந்த வகையில் திண்டிவனம் தனித் தொகுதியில் போட்டியிடுவதற்கு விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளரான கோ. அய்யனார் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். முதுகலை பட்டமும், சட்டப்படிப்பில் முதுநிலை படிப்பை முடித்து 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிவரும் 51 வயதான கோ.அய்யனார், திமுக-வில் கிளைக் கழக செயலாளர், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்து, தற்போது மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.
மேலும் முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடியின் ஆதரவாளரான கோ.அய்யனார், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி ஏற்கனவே பல முறை முயற்சியும் செய்துள்ளார். இந்த நிலையில் எப்படியாவது திண்டிவனம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
திமுகவின் திட்டம் என்ன.?
இதேபோல முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட மகளிர் அணி செயலாளரான சீத்தாபதி சொக்கலிங்கம் வயது மூப்பின் காரணத்தாலும் தனது மகன் செந்தில் முருகனுக்கு சீட்டு கேட்டு வருகிறார். மேலும் திமுக மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், மரக்காணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பழனியும் திண்டிவனம் தொகுதியை கைப்பற்றும் போட்டியில் உள்ளனர்.























