MK Stalin | ”ஸ்டாலின் அல்லது மம்தா” I.N.D.I.A கூட்டணி தலைவர் பதவி! சீனுக்கு வந்த உத்தவ் தாக்கரே
I.N.D.I கூட்டணிக்கு ஸ்டாலின் தலைவரானால் ராகுல்காந்தி பிரதமராக முடியும் மணிசங்கர் அய்யர் பேசியிருந்த நிலையில், ஸ்டாலின் அல்லது மம்தாவை I.N.D.I கூட்டணியின் தலைவராக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவில் இருந்து குரல் வந்துள்ளது.
மக்களவை தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து I.N.D.I கூட்டணியை உருவாக்கின. ஆனால் தொகுதி பங்கீடு விஷயத்திலேயே கூட்டணிக்குள் விரிசல் வர ஆரம்பித்தது. மம்தா பானர்ஜி, அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மாநில தேர்தல்களில் காங்கிரஸை எதிர்த்து களத்தில் நிற்கும் சூழல் வந்தது. கூட்டணியே ஒற்றுமையாக இல்லை என பாஜகவினர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர், I.N.D.I கூட்டணியை ஒருங்கிணைக்க வேண்டும் என்றால், அதற்கு சிறந்த நபர் மு.க.ஸ்டாலின் தான் என பேசியிருந்தார். யாரோ ஒருவர் முழு நேரத்தையும் செலவிட்டு I.N.D.I கூட்டணியை ஒருங்கிணைத்தால், ராகுல்காந்தி பிரதமராக முடியும். அந்த நபர் வெறும் முழக்கங்களை மட்டும் எழுப்பாமல் பிரச்னைகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். கூட்டாட்சியை விட்டுக் கொடுக்காமல் கடந்த ஓராண்டாக ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்துள்ளார். I.N.D.I கூட்டணியின் தலைவராவதற்கு சிறந்த நபர் ஸ்டாலின் தான் என நான் நினைக்கிறேன். அதேபோல் ராகுல்காந்தி பிரதமராக வருவதற்கு ஸ்டாலின் தடையாக இருக்க மாட்டார் என்றும் சொல்லியிருந்தார். மணிசங்கர் பற்றி கேள்வி கேட்ட போது அவர் கட்சியிலேயே இல்லை என பதில் கொடுத்தார் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிலும் இதே குரல் வந்துள்ளது. சாம்னாவில் வந்துள்ள கட்டுரையில் பாஜகவின் ஆதிக்கத்தை வீழத்த வேண்டுமானால், I.N.D.I கூட்டணி தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைய வேண்டும். அதற்கு மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை கூட்டணியின் தலைவராக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மக்களவை தேர்தல் வரை காத்திருக்காமல் தெளிவான தலைமையின் கீழ் அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
I.N.D.I கூட்டணியினர் சிதறிக் கிடப்பது மாநில தேர்தல்களிலும் பாஜகவுக்கு சாதகமாக அமைவதால் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்து வருகிறது. தலைவரே இல்லாமல் கூட்டணி இயங்குவதால் தான் ஒருங்கிணைந்த முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவதாக சொல்லப்படும் நிலையில், கூட்டணியில் தலைவருக்கான சாய்ஸாக மு.க.ஸ்டாலினையே பலரும் முன்னிறுத்த ஆரம்பித்துள்ளனர்.






















