DMK alliance seat allocation : எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? ஆட்டத்தை ஆரம்பித்த திமுக- யார் யாருக்கு அழைப்பு.?
DMK alliance seat allocation : தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 இடங்களை ஒதுக்க திமுக தலைமை முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு- பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை, எந்த எந்த தொகுதிகள் என முடிவு செய்யும் பணியை திமுக தொடங்கியுள்ளது. இதன் படி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை இன்று (பிப்ரவரி 22-ந் தேதி) திமுக தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மநீம, முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இம்முறை தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கும் காங்கிரஸ்
திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி டிசம்பர் மாதமே பேச்சுவார்த்தை குழுவை அமைத்து காத்திருந்தது. ஆனால் திமுக சார்பாக சுமார் 2 மாதங்களுக்கு பிறகு நேற்றைய தினம் தான் குழுவை அறிவித்தது. டி.ஆர். பாலு தலைமையிலான இந்த குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முஸ்லிம் லீக் கட்சிக்கு அழைப்பு
இந்த நிலையில் திமுகவை பொறுத்தவரை எப்போதும் முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியிடம் இருந்தே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கும் அந்த வகையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே ஏ எம் முகமது அபுபக்கர், மாநில பொருளாளர் எம் எஸ் ஏ ஷாஜகான், மாநிலத் துணைத் தலைவர் எம் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருந்தது. வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூர் ஆகிய 3 தொகுதியில் ஐ.யூ.எம்.எல் போட்டியிட்டது. ஆனால் 3 தொகுதியிலும் ஐ.யூ.எம் ல்.எல் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது ஐ.யூ.எம்.எல் கட்சியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் திமுக தரப்பில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நாளைய தினம் மனித நேய மக்களை கட்சி மற்றும் மதிமுகவையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வருகிற 26 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்பாகவே குழுவை அமைத்து காத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், தேமுதிகவிற்கு 6 அல்லது 7 தொகுதிகளும், முஸ்லிம் லீக், மமக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு 6 தொகுதிகளும், கொங்கு கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை குறைந்தது 170 இடங்களுக்கு குறையாமல் உதயசூரியன் சின்னத்தை களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளது.























