தமிழக மீனவர்கள் விடுதலை: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டு அவர்கள் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் நேற்று (09.11.2025) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (10.11.2025) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தின் சாராம்சம்
அக்கடிதத்தில் 09.11.2025 அன்று இரவு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது இயந்திரப் படகினையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதை தெரிவித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இலங்கை காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும்
இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளதென குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் 2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாகவும தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடுமையான துன்பத்தில் மீனவர்களின் குடும்பங்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பியுள்ள கடலோர சமூகங்களை ஆழமாகப் பாதித்துள்ளதாகவும் அவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுப் பணிக்குழு
இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை (Joint Working Group) மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மீனவர்கள் விபரம்
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் உட்பட மொத்தம் 14 தமிழக மீனவர்கள், படகு பழுதான நிலையில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து மீட்க வலியுறுத்தி, அவர்களது குடும்பத்தினர் கடற்கரையில் கண்ணீருடன் காத்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது வாழ்வாதாரமான படகையும் மீட்டுத் தர வேண்டும் என மீனவக் குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுக்கடலில் நேர்ந்த துயரம்
பூம்புகார், வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அன்று 14 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில், வானகிரியைச் சேர்ந்த ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத், அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் ஆகிய 12 மீனவர்களும், தரங்கம்பாடி கோவிந்து மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி ஆகிய இரு மீனவர்களும் அடங்குவர்.
படகு கோளாறு
மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பழுதானது. இதனால், அவர்கள் படகை ஜெகதாப்பட்டினம் பகுதிக்குக் கொண்டு சென்று, அங்கிருந்த உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டனர். சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை (நவம்பர் 8) அன்று மீண்டும் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குள் புறப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, கடலுக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே படகு மீண்டும் பழுதாகி நடுக்கடலில் தத்தளிக்க ஆரம்பித்தது.
இதனால், திசைமாறி படகு சென்று கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகு மற்றும் அதில் இருந்த 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தற்போது இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





















