மேலும் அறிய
பிரதமர் மோடி முதலில் இதை நிறுத்த வேண்டும்! - மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி: ஜி.எஸ்.டி குறித்து அதிரடி கருத்து!
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும் அமித்ஷா தலைமையிலான ஆட்சிதான் நடக்கும் - மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி

மாணிக்தாகூர் எம்.பி
Source : whats app
வெளிநாட்டு சமூக ஊடக செயலிகளை பயன்படுத்துவதை மோடி முதலில் நிறுத்த வேண்டும் என மதுரை திருமங்கலத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டியளித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ உரப்பனூர் கிராமத்தில் பழைய கிராம பொது சாவடியை அகற்றிவிட்டு புதிதாக கிராம சாவடி கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஜி.எஸ்.டி., குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு
2016-ல் ஜி.எஸ்.டியை மோடி கொண்டு வரும் போது நல்ல திட்டத்தை எப்படி பாழாக்க முடியும் என்பதை பார்க்க முடிந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சொன்னது போல எளிமையான வழிமுறையை கொண்டு வருவதை விட்டு, சிறு குறு தொழில்களில் பிரச்னையை உருவாக்கும் ஜிஎஸ்டியாக மாற்றினார்கள். ஏழு எட்டு வருடங்களுக்கு பின்பு திருப்பி ஞானோதயம் பிறந்துள்ளது. தீபாவளிக்கு சிறப்பு செய்தி வரும் என கூறியுள்ளார். 18 சதவீதத்தை 5% ஆக குறைக்க வேண்டும், மக்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வேண்டும், என்பதுதான் கோரிக்கையாக உள்ளது. ஆனால் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்துகிற பொருட்களுக்கு 18 சதவீதம் கொண்டு வரவேண்டும் இது தான் ஜிஎஸ்டி நோக்கமாக இருந்தது. ஆனால் மோடி அரசு ஐஸ்கிரீமில் தொடங்கி பாப்கான் வரைக்கும் பல வகையில் ஏழைகளுக்கு எதிரான நடுத்தர குடும்பத்திற்கு எதிரான வகையில் குழப்பத்தை உருவாக்கிய ஜிஎஸ்டியை கொண்டு வந்துள்ளது.
9 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றம்
இப்போது ஜிஎஸ்டி குறைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல மத்திய அரசு பல காலத்திற்கு முன்பாக ராகுல் காந்தி சொன்னது போல கேட்டிருக்க வேண்டும். 2016 ல் ராகுல் காந்தி "தவறான அணுகுமுறை, இதனால் மிகப்பெரிய இழப்பு இந்தியாவிற்கு ஏற்படும். சாமானியர்களுக்கு ஏற்படும் சிறுகுறி தொழில் செய்பவர்களுக்கு ஏற்படும்" என இந்த அரசுக்கு ராகுல் காந்தி சொன்னதை கேட்காமல் 9 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றம் கொண்டு வருகிறார்கள். இந்த மாற்றத்தை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதனால் தீபாவளி வரை பொறுத்து இருப்போம்.
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் யூடியூப், பேஸ்புக் எக்ஸ் தளம் உள்ளிட்ட வெளிநாட்டு வலைதளங்களை பயன்படுத்தாமல் இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது குறித்த கேள்விக்கு
முதலில் மோடி யூடியூப், பேஸ்புக் டுவிட்டர் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அவர் இந்திய வலைதளத்தை பயன்படுத்த வேண்டும். ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் மோடி தனக்கு செய்து கொள்ள மாட்டார். யூடியூப் பேஸ்புக் மாதிரி சோசியல் மீடியாக்கள் இந்தியாவில் உருவாவதை வளர விடாமல் தடுத்தவர் மோடி. தற்போது புது டயலாக் புதிய வசனம் புதிய ஸ்கிரீன் ப்ளேவை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார்.
எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு
எடப்பாடியாரை பொறுத்தவரை சேலத்தை விட்டு இப்போது வெளியே வந்திருக்கிறார். வெளியே வந்து அமித்ஷா தலைமையில் அதிமுகவை நடத்தி வருகிறார். அந்த அமித்ஷா தலைமையிலான அதிமுக ஊரெல்லாம் எப்படி மக்களை கூட்டுகிறார்கள் என்பது தெரியும். இது அவரது முதல் பயணமாக தெரிகிறது. இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது என்றால் அதிமுக அமித்ஷாவினுடைய அதிமுக மாறிவிட்டது. ஆட்சிக்கு வந்தாலும் அமித்ஷா ஆட்சி தான் நடக்கப் போகிறது. அமித்ஷா தலைமையில் மக்கள் தலைமையை ஏற்றுக் கொள்வார்களா? என்பது தான் கேள்வி என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















