மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு...மெத்தனமாக காவல் ஆய்வாளர்! அதிரடி காட்டிய டிஐஜி
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் நடைபெற்ற இரட்டைக்கொலை வழக்கில் பெரம்பூர் காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் இரட்டை கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பணியில் மெத்தனமாக இருந்ததாக பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்த சாராய வியாபாரிகள்
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 14 -ஆம் தேதி 25 வயதான ஹரிஷ், பொறியியல் கல்லூரி மாணவர் 20 வயதான ஹரிசக்தி ஆகிய இரண்டு இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தட்டிக் கேட்டதாகவும் அதன் சாராய விளக்குகள் வியாபாரிகள் இவர்கள் இருவரையும் படுகொலை செய்தனர் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
பொதுமக்கள் போராட்டம்
இந்த இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்களும், இறந்த இளைஞர்களின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெரம்பூர் காவல் நிலையத்தை சேர்ந்தோர் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்றும் பொதுமக்கள் அழுத்தமாக குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.
ஐந்து பேர் கைது
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். இதனை அடுத்து பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை மூன்று தனிப்படை அமைத்து தேடி வந்தனர். கொலை தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரிகள் ஐவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
இந்நிலையில் பெரம்பூர் காவல் ஆய்வாளராக உள்ள நாகவள்ளி பணியில் மெத்தனமாக இருந்தாக கூறி காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தஞ்சை மாவட்டம் சுவாமிமலை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த மலைச்சாமியை பெரம்பூர் காவல் ஆய்வாளராக நியமித்து தஞ்சை சரக டிஐஜி ஹியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.
சமூக ஆர்வலர்கள் கண்டனம்:
இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஆ.ஷங்கமித்திரன் கூறுகையில், பெரம்பூர் காவல் நிலையத்தில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்ற எஸ்பி ஏட்டு பிரபாகரன் இடமாற்றம் செய்ய வேண்டும். இவரது தொலைபேசி எண்களை ஒரு மூன்று ஆண்டு காலத்திற்கு ஆய்வு செய்தாலே சாராயத் தொழில் அதிபர்களின் பரிமாற்ற தொடர்புகள் தெரியவரும்.
மேலும் இவர் மூலமாக மாமூல் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்ற எஸ்பி காவல் ஆய்வாளர் மற்றும் சில அதிகாரிகளை இடமாற்றம் செய்யாமல், பெரம்பூர் காவல் ஆய்வாளரை மட்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி இருப்பது எங்களுக்கு ஒரு ஏமாற்றத்தை அளிக்கிறது.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் நேர்மையான அதிகாரிகளை கொண்டு ஒரு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இரட்டை கொலை சம்பவத்தில் கள்ள சாராய விற்பனை தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு உண்மை சம்பவங்களை தெரிவித்து இருந்தேன். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை ஒரு வியாபார ஸ்தலமாக மாற்றி, சம்பாதித்துக் கொண்டிருக்கின்ற அதிகாரிகளை கண்டுபிடித்து அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டால் மட்டுமே இந்த மாவட்டம் நன்றாக இருக்கும். எளிய மக்கள் நம்பி இருக்கும் மாபெரும் பாதுகாப்பு அரனாக இருக்கின்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகின்ற அதிகாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி இந்த மாவட்டத்தையும், இந்த மாவட்ட மக்களையும் பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

