தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
வரலாற்றில் முதன் முறையாக, பார்சல் சேவைகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில் சேவை, வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் துவக்கம்.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.

தெற்கு ரயில்வே வரலாற்றில் முதன் முறையாக, பார்சல் சேவைகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில் சேவை, வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பது, தென் மாநிலங்களிடையேயான சரக்கு மற்றும் வர்த்தகப் போக்குவரத்தில் ஒரு புதிய வளர்ச்சியை ஏற்படுத்தவுள்ளது.
கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் இந்தச் சிறப்புப் பார்சல் ரயில் சேவை, மங்களூரு சென்ட்ரல் மற்றும் சென்னை ராயபுரம் இடையே இயக்கப்படவுள்ளது. இந்தத் தனித்துவமான நடவடிக்கை, வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குப் பயணிகளின் ரயில் பெட்டிகளில் சரக்குகளை அனுப்பும் சிரமத்தைக் குறைத்து, சரக்குப் போக்குவரத்தை விரிவுபடுத்தும் ஒரு முக்கியமான சேவையாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தச் சிறப்புப் ரயில் சேவை , 12 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இதில் ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 23 டன் எடையுள்ள சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இது, பெருமளவிலான பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு மிகவும் வசதியானதாக அமையும்.

மங்களூரு சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 12 ஆம் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் புறப்படும் இந்த ரயில், மறுநாள் சனிக்கிழமை மதியம் 1:30 மணிக்கு சென்னை ராயபுரம் வந்தடையும். சென்னை ராயபுரத்தில் இருந்து வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 3:45 மணிக்குக் கிளம்பி, மறுநாள் புதன்கிழமை மதியம் 2:20 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும் வகையில் இதன் நேர அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் இருந்து தயாராகும் ஆடைகள், நாட்டின் பிற பகுதிகளுக்கும், துறைமுகங்களுக்கும் விரைவாகச் சென்றடைய இந்த ரயில் உதவும். இது, தென்னிந்திய ஜவுளித் துறையின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும்.
சேலம், ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட 12 முக்கிய ரயில் நிலையங்களில் நின்று, சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது. இது, தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரங்களான சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகியவற்றை கேரளா மற்றும் கர்நாடகாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளுடன் நேரடியாக இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள், அவற்றின் தரத்தைப் பாதுகாக்க, விரைந்து சென்னை போன்ற பெரிய சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு இந்தச் சேவை முக்கிய பங்காக அமையும். இது, மீன் பதப்படுத்துதல் மற்றும் விநியோகச் சங்கிலிக்கு ஒரு முக்கியமான உதவியாக இருக்கும். மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் ஸ்டீல் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான வசதி, தொழிலக உற்பத்திப் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்கும்.
தெற்கு ரயில்வேயில் பார்சல் போக்குவரத்திற்காக 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் இயக்கப்படுவது, சரக்கு மேலாண்மையில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ரயில்வேயில் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும், அனுப்பப்படும் பார்சல்களுக்கு மூன்று பிரிவுகளில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















