cyclone season starts | "நவம்பர் 22 முதல் 27 வரை..| வெளுக்க போகும் கனமழை! | "சென்னை மக்களே உஷார்
நவம்பர் 22ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை ஆரம்பமானதும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆனால் நவம்பர் மாதம் ஆரம்பமானதில் இருந்து எதிர்பார்த்த அளவு மழைப்பொழிவு இல்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் வங்கக் கடலில் வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 24ஆம் தேதிக்கு பின் மேலும் வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 22ம் தேதி முதல் 2 நாட்களுக்கு கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
அதேபோல் நவம்பர் 27 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளனர்.





















