சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு! பாதை நேரங்களில் மாற்றம்: முக்கிய அறிவிப்பு வெளியீடு!
பக்தர்களின் வசதிக்காக பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு - சத்திரம் பாதையில் பக்தர்கள் செல்வதற்கான நேர விபரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான ஆன்மீக ஸ்தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சென்று வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் நாளிலிருந்து மண்டல பூஜை தொடங்கும். இந்த நிலையில் கார்த்திகை நாளிலேயே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க பாதயாத்திரையாக சபரிமலை செல்கின்றனர். இதன்படி கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.
சபரிமலை செல்ல பொதுவாக நிலக்கல் வந்து அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி பம்பை நதிக்கு சென்று, அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலை உச்சியில் ஏற வேண்டும். இந்த பாதைதான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் இந்த பாதையில் செல்வார்கள். இதேபோல் எரிமேலியில் இருந்து சபரிமலைக்கு பெருவழிப்பாதையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் நடந்து வர செல்வர்.
இந்த இரண்டு பாதையை தாண்டி, மற்ற இரண்டு பாதைகள் உள்ளன. இரண்டு பாதைகளுமே மிக எளிதான பாதைகளாகும். இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகில் சத்திரம், புல்லுமேடு ஆகிய 2 மலைப்பாதைகள் வழியாக சபரிமலைக்கு செல்ல முடியும். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனையொட்டி இந்த 2 பாதைகளும் ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்காக திறந்துவிடப்படுவது வழக்கமாகும். அதன்படி சத்திரம், புல்லுமேடு மலைப்பாதைகள் திறக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தற்போது ஐயப்ப பக்தர்கள் மலைப்பாதைகள் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்திரம், புல்லுமேடு பாதைகள் வழியாக சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை செல்ல தொடங்கியுள்ள நிலையில், இப்பாதைகளில் பக்தர்கள் செல்வதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதைகள் வழியாக பாதயாத்திரை எந்தெந்த நேரங்களில் செல்லலாம் என்பதை பார்க்கலாம். சென்ற வருடம் ஐயப்ப பக்தர்கள் செல்வதற்கு நியமிக்கப்பட்டிருந்த நேரமானது, சத்திரம் பாதை வழியாக காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே சபரிமலைக்கு பாதயாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் புல்லுமேடு பாதை வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில்,
தற்போது நேரமாற்றம் செய்யப்பட்டு இந்த இரண்டு பாதைகளிலும் பக்தர்கள் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க கால நேர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பெருவழிப்பாதையில் கோயிக்காவிலிருந்து காளகட்டிக்கு பக்தர்கள் காலை 6.00 முதல் மாலை 5.00 வரை செல்லலாம். அழுதையில் இருந்து காலை 7.00 முதல் மதியம் 2:30 வரை பக்தர்கள் செல்லலாம். அதுபோல புல் மேடு பாதையில் சத்திரத்தில் காலை 7:00 மணி முதல் பகல் ஒரு மணி வரை மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் வரும் பக்தர்கள் அடுத்த நாள் காலையில்தான் அனுப்பப்படுவார்கள். அது போல இந்த பாதையில் திரும்பிச் செல்லும் பக்தர்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.





















