குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பூர்விக இல்லத்திற்கு வருகை தரும் துர்கா ஸ்டாலின் - கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்...!
திருவெண்காடு கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பூர்விக இல்லத்திற்கு வருகை தரும் துர்கா ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

பகுதிநேர சிறப்பாசிரியர்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், இசை, உடற்கல்வி, கட்டிட கலை, தோட்டக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும், இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஊதியம் இல்லாத மே மாதம்
கடந்த பதிமூன்று ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 12,500 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 13 ஆண்டுகள் முடிந்த பின்னும் கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை.

தொடர் கோரிக்கை
இந்நிலையில் திமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்வதாக 2016, 2019, 2021 ஆகிய தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அறவழியில் போராடி வந்தனர். மேலும் தற்போது நடந்து முடிந்த திமுக ஆட்சியில் கடைசி முழு பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் அதில் தங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால், கல்வி மானிய கோரிக்கைலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினோ, கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழியோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வில்லை.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியத்தை கைவிட்டு, அரசு சலுகைகள் கிடைக்க காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய இன்னும் ஒரு 300 கோடி போதும். இதற்கு முதல்வர் அரசு கொள்கை முடிவு எடுத்தால் போதும். தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 181 வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 14 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதை கைவிட்டு, நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை எனவும், இதனை அறிவிக்கும் வரை தாங்கள் பல்வேறு கட்ட தொடர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்தி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறை நிரப்பும் போராட்டம்
இந்நிலையில் தங்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரத்தை வலியுறுத்தி திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 181 நிறைவேற்ற கோரி வருகின்ற ஜுலை 8-ம் தேதி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மாநில தலைநகர் சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் தங்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் என தங்கள் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் வருகின்ற ஜுலை 7 -ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துணைவியாரின் சொந்த ஊரான திருவெண்காட்டில் அவரது இல்லம் அருகே அமைந்துள்ள புதன் ஸ்தலமான சுவேதாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள துர்கா ஸ்டாலின் வரவுள்ள நிலையில், அவரது கவனத்திற்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை கொண்டு சென்று அதன் மூலம் முதல்வரின் கொண்டு செல்லும் நோக்கில் துர்கா ஸ்டாலின் இல்லம் அருகே திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 181 -னை நிறைவேற்ற கோரி மயிலாடுதுறை மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சுவர் விளம்பரத்தை எழுதி வருகின்றனர்.
மேலும், கலைஞர் சொன்ன வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முதல்வர் அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. 15 வது கல்வி ஆண்டில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது 12,500 ரூபாய் தொகுப்பூதியம் தான் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால் இன்றைய விலைவாசி உயர்வில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை ஸ்டாலினுக்கு கொடுத்த வாக்குறுதி
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் கடந்த 2021 -ம் ஆண்டு நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின், பகுதிநேர ஆசிரியரான ஸ்டாலினின் பணிநிரந்த கோரிகையை கேட்டு, இந்த ஸ்டாலின் பதவி ஏற்ற 100 நாட்களில் அந்த ஆசிரியர் ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேற்றபடும் என உறுதி தந்த நிலையில் 4 ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்ற படவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில செயலாளர் வா.முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உடனிருந்தனர்.



















