மேலும் அறிய
சிவகங்கை இளைஞர்களே, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு!
3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
Source : whats app
சிவகங்கை மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600- வீதம் 3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும்.
உதவித்தொகை பெற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 (எழுபத்தி இரண்டாயிரத்திற்கு) மிகாமல் இருத்தல் வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ,மாணவியருக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
எங்கே ஒப்படைக்க வேண்டும்
மேலும், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அரசின் வேறு உதவித்தொகை எதுவும் பெறுதல் கூடாது. பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-வீதமும் மேனிலை கல்விதேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-ம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும், உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது. எனவே, இத்திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளைஞர்கள் விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















