விஜய்க்கு முதல்வர் தகுதியில்லை! EPS-ஐ கிண்டல் செய்த லியோனி: அதிமுக குறித்து பரபரப்பு தகவல்!
"அதிமுகவினர் கூட திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என திண்டுக்கல் ஐ.லியோனி தகவல்"

விஜய்க்கு நர்சரி பள்ளிக்கு கூட முதல்வராக தகுதியில்லை, வருங்காலத்தில் அதிமுகவினரே திமுகவிற்கு வாக்களிக்கும் நிலை உருவாகும் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு பாடநூல் கழக மண்டல அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் போக மீதமுள்ள புத்தகங்கள் நிலை, வருங்காலத்தில் தேவைப்படும் எண்ணிக்கை குறித்து வட்டார அலுவலரிடம் கேட்டறிந்தார்.
விஜய்க்கு இருக்கும் தைரியம் கூட இல்லை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் ஐ. லியோனி , தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு இருக்கும் தைரியம் கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. தமிழக அரசின் செயல் திட்டங்களை பார்த்து அதிமுகவினரே திமுகவுக்கு வாக்களிக்கும் நிலை இன்னும் மூன்று மாதத்தில் உருவாகிவிடும்.
முதல்வராக தகுதி இல்லை
அதிமுக பாஜக கூட்டணி பிரிந்த போது வெடி வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடிய அதிமுகவினர், தற்போது மீண்டும் இணைந்த நிலையில் அதை கொண்டாட கூட இல்லாத வெறுப்பு சூழ்நிலை உள்ளது. மேலும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நர்சரி பள்ளிக்கூட, முதல்வராக தகுதி இல்லை. பக்கம் பக்கமாக பேப்பரை வைத்துக்கொண்டு பேசியும் வொர்க் ஃப்ரம் ஹோம் எனும் நிலையிலேயே கட்சியை நடத்திக் கொண்டு வருகிறார்.
மக்களிடம் செல், மக்களிடம் பழகு மக்களிடம் கற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப பணி செய் என கற்றுக் கொடுத்த காஞ்சி பேரறிஞர் அண்ணாவின் வழியில் தற்போது ஆட்சி நடந்து வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்
சி.வி.எம்.பி. எழிலரசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், எம்.எஸ். சுகுமார், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர் கொடி குமார், காஞ்சிபுரம் வட்டார தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.





















