![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Madhya Pradesh: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. குணமாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் சூடு வைத்த கொடூரம்..
மத்தியப் பிரதேசத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Madhya Pradesh: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. குணமாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் சூடு வைத்த கொடூரம்.. Infant branded with 'hot iron' to treat pneumonia in Madhya Pradesh probe ordered Madhya Pradesh: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. குணமாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் சூடு வைத்த கொடூரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/24/4e3b90ca60a178e991146fd92f0b44971700800312904589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ஒன்றரை மாத ஆண் குழந்தைக்கு, சிகிச்சையளிப்பதற்காக உள்ளூர் செவிலியரால் 40 முறை சூடான இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அந்த குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தையின் கழுத்து, வயிறு மற்றும் உடல் உறுப்புகளில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சூடு வைக்கப்பட்ட தழும்புகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை இப்போது ஷாதோலில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்டில் ஹார்டி கிராமத்தில் வசிக்கும் குழந்தையின் குடும்பத்தினர், நவம்பர் 4 ஆம் தேதி நிமோனியாவுக்கு சிகிச்சையளிக்க உள்ளூர் செவிலியரான “ டாய் (daai)” அணுகியதாகவும், அவர் அந்த குழந்தையில் உடலில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு கம்பியால் சூடு வைத்தாகவும் தெரிவித்தனர்.
தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (CMHO) டாக்டர் ஆர். எஸ். பாண்டே இது தொடர்பாக கூறுகையில், அந்த குழந்தையில் பாட்டி இதேபோல் காய்ச்சலுக்காக உள்ளூர் செவிலியரை அணுகியதாகவும் அவருக்கும் இதேபோல் சூடான இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்டதாகவும் இதனால் அந்த பழைய முறையை தனது பேரக் குழந்தைக்கும் செய்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அந்த குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த சுகாதார அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலப் பிரிவுத் தலைவர் டாக்டர் நிஷாந்த் பிரபாகர் கூறுகையில், “ குழந்தை பிறந்த உடன் அந்த குழந்தைக்கு சூடு வைக்கப்பட்டுள்ளது. பின் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போதும் சூடு வைக்கபட்டுள்ளது” என கூறியுள்ளார். தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களில் இது போன்ற மூட நம்பிக்கை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஷாதோல் மாவட்டத்தில் நிமோனியாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக 50 முறைக்கு மேல் சூடான இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டு இரண்டரை மாத குழந்தை இறந்ததைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. அதேமாதத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத பெண் குழந்தைக்கு இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)