குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
கோவையில் மனைவியை கத்தியால் குத்த முயன்ற கணவர் கைது

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் தாக்க முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரத்குமார் மற்றும் அவரது மனைவி பார்வதி தேவி ஆகியோர் தம்பதியர். பார்வதி தேவி டி.வி.எஸ் நகர் பகுதியில் தர்பூசணி விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சரத்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும், மனைவியை சந்தேகித்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மது அருந்தும் பழக்கத்தால் சரத்குமார் தினமும் சண்டையில் ஈடுபட்டதால், மன உளைச்சலுக்கு ஆளான பார்வதி தேவி சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் நடந்த நாளில் மதியம், டி.வி.எஸ் நகர் பகுதியில் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பார்வதி தேவியிடம் சரத்குமார் வந்து மீண்டும் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரம் அடைந்த அவர் கத்தியால் மனைவியை குத்தியதாக கூறப்படுகிறது.
பார்வதி தேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து பார்வதி தேவி அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சரத்குமாரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்




















