Special Train: சென்னை திரும்புபவர்களுக்கு குட் நியூஸ்.. மண்டபம் To சென்னை சிறப்பு ரயில் விவரம்
Special Train: பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக மண்டபம் பகுதியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

உலகத் தமிழர்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களின் ஒன்றான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு முடிந்துள்ளது. இந்த பொங்கல் பண்டிகை விழாவை முன்னிட்டு சுமார் 9 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், சென்னையில் தங்கி இருந்த பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்தனர். தங்களது பூர்வீக வீடுகளில் பொங்கல் வைத்து, விடுமுறை தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் விடுமுறை முடிய உள்ளதால், சென்னையில் இருந்து வெளியேறிய பல லட்சக்கணக்கான மக்கள் சென்னையை நோக்கி படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மீண்டும் போக்குவரத்து துறை மற்றும் ரயில்வே துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. பெரும்பாலான முன்பதிவு பேருந்துகள் மற்றும் ரயில்களில் இடம் நிரம்பிவிட்டதால் சென்னைக்கு வரவேண்டிய மக்கள் தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் மண்டபத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மண்டபம் - சென்னை எழும்பூர் இடையே ஒரு வழி சிறப்பு ரயில் வரும் 19ஆம் தேதி அன்று இயக்கப்பட உள்ளது. pic.twitter.com/SsJb9KThPV
— PIB in Tamil Nadu (@pibchennai) January 17, 2025
சிறப்பு ரயில் விவரம்
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவதால், ஜனவரி 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு மண்டபத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது சென்னை எழும்பூருக்கு மறுநாள் காலை 11 மணி 30 நிமிடங்களுக்கு வந்து சேருகிறது. இந்த ரயிலில் ஏசி வகுப்பு பெட்டிகள் மூன்றும், முன்பதிவு பெட்டிகள் 9 , முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் 4 - ஆகியவை இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் மண்டபத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம், மானாமதுரை, திருச்சி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூரை வந்து அடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

