சென்னை-விழுப்புரம் வெறும் 1 மணி நேரத்தில்! ₹75,000 கோடி RRTS ரயில் திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!
Chennai to Villupuram RRTS Train: "சென்னை - விழுப்புரம் இடையே ஒரு மணி நேரத்தில் பயணம், 'RRTS' ரயில் இத்திட்டத்தின், மொத்த செலவு சுமார் ₹75,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது."

RRTS Train Chennai to Villupuram: சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருவதால், பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு எழுந்துள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு பொது போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையையும், தென்மாவட்டங்களின் நுழைவாயிலான செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளை, இணைக்கும் வகையில் அதிவேக ரயில் திட்டமான "மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு" (RRTS) குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின்படி, ஆலந்தூர் முதல் விழுப்புரம் வரையிலான வழித்தடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழித்தட விவரங்கள்: எங்கு தொடங்கி எங்கு முடிகிறது?
இந்த அதிவேக ரயில் பாதை சென்னையின் ஆலந்தூரில் தொடங்கி, பல்லாவரம், சென்னை சர்வதேச விமான நிலையம், தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வழியாகச் செல்கிறது. அங்கிருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம் வழியாகச் சென்று விழுப்புரத்தில் நிறைவடைகிறது.
மேலும், இந்தத் திட்டத்தில் ஒரு சிறப்பம்சமாக, விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி மற்றும் கடலூர் வரை சுமார் 64 கி.மீ தூரத்திற்கு ஒரு கிளைப் பாதையும் (Spur line) அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த ரயில் பிணையத்தின் நீளம் 146 கி.மீ ஆக இருக்கும்.
சென்னையின் மக்கள் நெரிசல் மற்றும் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, ஆலந்தூர் முதல் கிளாம்பாக்கம் வரை தண்டவாளங்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் (Underground) அமைக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்திற்குப் பிறகு, தண்டவாளங்கள் ஜி.எஸ்.டி சாலையின் நடுவே அல்லது ஓரங்களில் மேம்பாலங்களாக (Elevated) அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 160 கி.மீ வேகம்
இந்த ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. எதிர்காலத்தில் தேவைப்பட்டால், இந்த வேகத்தை 300 கி.மீ வரை உயர்த்தும் வசதிகளும் தண்டவாள அமைப்பில் இருக்கும். டெல்லி-மீரட் இடையே உள்ள நவீன ரயில் சேவையைப் போலவே, இதுவும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட உள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன ? KEY Features of RRTS Train
இந்தத் திட்டம் வெறும் பயணத்திற்கானதாக மட்டும் இல்லாமல், தமிழகத்தின் தெற்குப் பகுதியின் பொருளாதார முதுகெலும்பாக அமையும். இரவு நேரங்களில் இந்த ரயில்களை சரக்கு போக்குவரத்திற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் சென்னையில் தங்குவதைத் தவிர்த்து, திண்டிவனம் அல்லது விழுப்புரம் போன்ற பகுதிகளில் வசித்துக் கொண்டே சென்னைக்கு வேலைக்கு வந்து செல்ல இது வழிவகுக்கும்.
இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக சுமார் ₹75,000 கோடி செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2032-ஆம் ஆண்டிற்குள் இந்த ரயிலில் ஒரு நாளைக்கு சுமார் 2.18 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, சென்னை-விழுப்புரம் இடையேயான ஜி.எஸ்.டி சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

4 மணிநேர பயணம் 1 மணி நேரத்தில்...
தற்போது சென்னையிலிருந்து விழுப்புரம் செல்வதற்கு பேருந்து அல்லது ரயிலில் சுமார் 4 மணிநேரம் வரை ஆகிறது. ஆனால், இந்த புதிய RRTS ரயில் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, பயணிகள் வெறும் 1 மணி நேரத்தில் விழுப்புரத்தை அடைய முடியும். இது தினமும் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் தொழில் ரீதியாக சென்னை சென்று வருபவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















