Edappadi Palaniswami: நீங்க செய்வது நியாயமா? - முதல்வர் விஜயிடம் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி.. அதிர்ந்த சட்டசபை!
அதிமுக பொதுச்செயலாளராக நான் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறேன். அப்படியிருக்கும்போது சில கருத்து வேறுபாடுகள் கட்சியில் இருக்கும் நிலையில் ஒரு தரப்பு எம்.எல்.ஏ.,க்களை விஜய் சந்தித்தது பற்றி இபிஎஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிமுகவில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் ஒரு தரப்பு எம்.எல்.ஏ.,க்களை விஜய் சந்தித்ததை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 144 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் விஜய் பெரும்பான்மையை நிரூபித்தார். திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அதிமுகவில் 22 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாமக மற்றும் பாஜக எம்.எல்.ஏ,க்கள் 5 பேர் நடுநிலை வகித்தனர். இதன்மூலம் தவெக ஆட்சி பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. விஜய் தலைமையிலான ஆட்சி தொடரும்.
இதனிடையே முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன்மீது அனைத்து கட்சியின் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.
அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் நாங்கள் சட்டமன்றத்தில் பணியாற்றிருக்கிறோம். அவர்களை குறிப்பிட்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினோம். அதன்மூலம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 47 உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம். அதிமுக பொதுச்செயலாளராக நான் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது சில கருத்து வேறுபாடுகள் கட்சியில் வருகிறது. அது எல்லா கட்சிகளிலும் வருகிறது. அதில் ஒரு தரப்புக்கு மட்டும் முதலமைச்சர் விஜய் ஆதரவு தெரிவிப்பது எந்தவித நியாயம் என தெரியவில்லை. இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது.
அது குதிரைப் பேரத்திற்கு வழி வகுத்துவிடும் என்பதால் இதனை குறிப்பிடுகிறேன். அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டில் வர வேண்டும் என அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாக்கு சேகரித்தார்கள். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தான் 47 பேர் வெற்றி பெற்றிருக்கிறோம். 66 சதவிகிதம் மக்கள் தவெகவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
2011 முதல் 2021 வரை சிறப்பான ஆட்சியை அதிமுக கொடுத்தது. 6 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். குடிமராமத்து திட்டம் செயல்படுத்தி நீரிணை சேமித்தோம். டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அதிமுக தான் கொண்டு வந்தது.
எங்களுடைய 47 சட்டமன்ற உறுப்பினர்களும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியைக் கொடுக்கவே வெற்றி பெற்றிருக்கோம். எனக்கு வந்த தகவலில் உண்மையா, இல்லையா என தெரியவில்லை. பலருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தைக் கூறி ஆளுங்கட்சியில் இடம் பெற செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. நீங்கள் தூய்மையான ஆட்சி, வெளிப்படையான ஆட்சி என குறிப்பிட்டீர்கள். அந்த எண்ணத்தில் இருந்து பிறழாமல் ஆட்சி நடத்த வேண்டும்.
நான் ஆட்சியமைத்தபோது பல்வேறு பிரச்னைகளை நான் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் கையாண்டு தான் இன்றைக்கு நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொண்டு வந்திருக்கிறோம். ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ அதிமுக மக்களுக்காக சேவை செய்யும். மக்களுடைய பிரச்னையை முன்வைப்பது தான் எங்களுடைய நிலை. அதனால் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம்” என தெரிவித்தார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















