லிவிங் டூ கெதர் முதல் சிறை வரை.. பழிவாங்கத் துடித்த காதலனுக்கு கார் டிரைவர் வைத்த 'செக்'!
"சென்னை பெருங்களத்தூரில் இளம்பெண்ணை கடத்திய, காதலனை சாமர்த்தியமாக செயல்பட்டு போலீசில் ஒப்படைத்த கார் ஓட்டுநர்."

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் இளம்பெண் ஒருவரை கத்திமுனையில் காரில் கடத்திச் சென்ற காதலனை, கார் ஓட்டுநர் தனது துரித அறிவால் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதிய பெருங்களத்தூரைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
அப்போது அவருடன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான நந்தகுமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் சென்னைக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு இளம்பெண் வல்லக்கோட்டையில் உள்ள கூரியர் நிறுவனத்திலும், நந்தகுமார் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கிடங்கிலும் பணியாற்றி வந்தனர்.
'லிவிங் டூ கெதர்' வாழ்க்கை மற்றும் பிரிவு
இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே சுமார் 13 மாதங்கள் 'லிவிங் டூ கெதர்' முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், காலப்போக்கில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்தநிலையில், கடந்த மார்ச் 11-ம் தேதி நந்தகுமார் அந்தப் பெண் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். பேச வேண்டும் என்று வெளியே அழைத்து வந்த அவர், பெண்ணைத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பீர்க்கன்காரணை போலீசார் நந்தகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பழிவாங்கத் தீட்டப்பட்ட கடத்தல் திட்டம்
கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த நந்தகுமார், தனை சிறைக்கு அனுப்பிய இளம்பெண் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். அவரைப் பழிவாங்கத் திட்டமிட்ட நந்தகுமார், நேற்று முன்தினம் காலை அந்தப் பெண் பெருங்களத்தூர் பகுதியில் வேலைக்குச் செல்வதற்காகக் காத்திருந்தபோது அங்கு வந்துள்ளார்.
ஒரு 'கால் டாக்ஸி'யை வாடகைக்கு எடுத்து வந்த நந்தகுமார், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்துப் போட்டு கடத்திச் சென்றார். காருக்குள் வைத்து கத்தியைக் காட்டி அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
கார் ஓட்டுநரின் சாமர்த்தியமான நடவடிக்கை
காரில் பின்னால் அமர்ந்து நந்தகுமார் பெண்ணை மிரட்டுவதைக் கண்ட கார் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். ஆனால் பதற்றமடையாமல் நிதானமாகச் செயல்பட்ட அவர், காரை மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே ஓட்டிச் சென்றார். அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதை கவனித்த ஓட்டுநர், உடனடியாக காரை அவர்கள் அருகில் நிறுத்தி சத்தமிட்டு உதவி கோரினார்.
உடனடியாக விரைந்து வந்த போலீசார், காரைச் சூழ்ந்து கொண்டு கத்திமுனையில் பெண்ணை மிரட்டிக் கொண்டிருந்த நந்தகுமாரை மடக்கிப் பிடித்தனர். சம்பவம் நடந்த இடம் பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பீர்க்கன்காரணை போலீசார் நந்தகுமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டுநரின் இந்தச் சமயோசித செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Before You Go
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
ட்ரெண்டிங் செய்திகள்





















