விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி! பூந்தமல்லி, மாதவரத்தில் அதிர்ச்சி!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை வைக்க பந்தல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து , வாலிபர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்தியானது கணேஷ் சதுர்த்தி அல்லது கணேஷ் உத்சவ் என்றும் அழைக்கப்படுகிறது. விநாயகப் பெருமான் அனைத்து தடைகளையும் நீக்கி , புதிய தொழில் முயற்சி , முயற்சி அல்லது அறிவுசார் முயற்சிகள் போன்ற எந்தவொரு புதிய செயலின் தொடக்கத்திலும் வணங்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு , பல்வேறு பகுதிகளில் பெரிய மேடைகள் அமைத்து , சிலை வைத்து பொதுமக்கள் வணங்குவர்.
இரும்பு கம்பம் அமைக்கும் பணி - மின்சார பலி
சென்னை பூந்தமல்லி பிராடிஸ் சாலையில் தூம கேது விநாயகர் கோவில் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு , இக்கோவில் வளாகத்தின் முன் , வண்ண வண்ண கொடிகள் , மின் விளக்குகள் , ஒலி பெருக்கி அமைக்கும் பணி முடிந்து , கோவில் முன் பந்தல் அமைக்கும் பணி நடந்தது. இதில் பூந்தமல்லி மேல்மா நகரைச் சேர்ந்த பரத் ( வயது 28 ) மற்றும் அவரது நண்பர்கள் தென்னவன் உள்ளிட்ட நான்கு பேர் ஈடுபட்டனர். இதற்கான இரும்பு கம்பம் அமைக்கும் போது , மின் கம்பியில் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். மூன்று பேர் லேசான காயமடைந்தனர். போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு , பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரத்தின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மாதவரத்தில் மின்சாரம் தாக்கி பலி
சென்னை செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் ( வயது 22 ) இவர் பந்தல் போடும் வேலை பார்த்து வந்தார். மாதவரத்தில் ராஜாஜி தெருவில் விநாயகர் சிலை வைப்பதற்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்கம்பியில் பந்தலுக்கான இரும்பு கம்பம் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து பிரசாத் துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தோர் அவரை மீட்டு , ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். மாதவரம் போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





















