Trisha: விஜயுடன் திருமணத்துக்கு ஒன்றாக சென்ற விவகாரம்; செய்தியாளர் கேள்விக்கு த்ரிஷா ரியாக்ஷன் என்ன?
விஜய் & த்ரிஷா: மௌனம் காக்கிறாரா த்ரிஷா? திருமண நிகழ்வு குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் மவுனம்.

தவெக தலைவர் விஜயுடன், திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாகக் கலந்துகொண்டது குறித்த செய்தியாளர் கேள்விக்கு த்ரிஷா பதில் சொல்லாமல் மவுனமாகக் கடந்து சென்றார்.
தவெக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றுகோரி அவரின் மனைவி அண்மையில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதில் கணவர் விஜய், வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் தான் பல முறை கூறியும் அவர் அதில் இருந்து வெளியேறவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார் என்று தகவல் வெளியானது.
யார் அந்த நடிகை?
அந்த நடிகை யார் என்று தேவைப்பட்டால் வெளியே சொல்வேன், அவரின் மாண்பு கருதி தற்போதைக்கு அதுகுறித்து வெளியே சொல்லவில்லை என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்ததாகவும் தகவல் வெளியானது. எனினும் இதுகுறித்து விஜய் தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
தனது கட்சிக் கூட்டத்தில் பேசிய விஜய், பிறர் கவலைப்படும் அளவுக்கு தன் குடும்ப விவகாரத்தில் ஒன்றுமில்லை, தன்னுடைய பிரச்சினையை தானே பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி குடும்ப விழாவில், விஜயும் த்ரிஷாவும் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இருவரும் ஒரே காரில், ஒரே நிற ஆடை அணிந்து வந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
தனிப்பட்ட விவகாரம்
அது இருவரின் தனிப்பட்ட விவகாரம் என்று ஒரு தரப்பினரும், விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவ்வாறு நடந்துகொள்வது தவறு என்று இன்னொரு தரப்பினரும் வாதிட்ட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா மும்பை செல்வதற்காக சற்றுமுன் சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து 11:40-க்கு மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் மும்பை செல்வதற்காக நடிகை த்ரிஷா சென்னை வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்கள் த்ரிஷாவிடம் திருமண நிகழ்வு குறித்துக் கேள்வி கேட்டனர். அப்போது த்ரிஷா பதில் எதுவும் அளிக்காமல், மவுனமாக விமான நிலையத்திற்குள் விரைந்து சென்றார்.
























