விஜயை புகழ்ந்து முருகன் பாடல்.. கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட பாடகர் வேல்முருகன்!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் முருகன் பாடலை மாற்றி பாடிய பாடகர் வேல்முருகன் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு விழாவில் நடிகர் விஜய்யை புகழ்ந்து முருகனின் பக்தி பாடலை வரிகளை மாற்றி பாடிய விவகாரத்தில் பாடகர் வேல்முருகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு விழா
தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா கடந்த பிப்ரவரி 2ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜய், செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகனின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அவர் கடவுள் முருகனுக்குரிய மருதமலை மாமணியே முருகையா பாடலின் வரிகளை மாற்றி விஜயை புகழ்ந்து பாடினார். தொடர்ந்து வேல்முருகன் பாட, விஜய் நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதேசமயம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் குற்றால நாதன் நெல்லை மாவட்ட காவல் துறையில் வேல்முருகன் மீது புகார் ஒன்றை அளித்தார்.
அதில் முருகன் பாடலை மாற்றி பாடியதால் இந்து மக்களின் மனம் புண்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தார். பாடகர் வேல்முருகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
மன்னிப்பு கேட்ட வேல்முருகன்
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பாடகர் வேல்முருகனிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் மருதமலை மாமணியே முருகையா பாடலை விஜயை வைத்து ஒப்பிட்டு பாடினீர்கள். அது இப்போது சர்ச்சையாகி வருகிறதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சர்ச்சையாக வேண்டும் என அப்படி செய்யவில்லை. விஜய்க்கும், அந்த பாட்டு பாடியதற்கும் துளிகூட சம்பந்தமில்லை. தொடர்ச்சியாக பாடல் பாடிக் கொண்டிருக்கும்போது உற்சாக படுத்த வேண்டும் என எதேச்சையாக பாடினேன்.
என்னைப் படைத்த முருகனை நான் அவமானம் செய்வது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொல்வது போன்றது. நான் விஷம் குடித்த மாதிரி. ஒருநாளும் அப்படி செய்ய மாட்டேன். பாடல் பாடும்போது எதிரில் இருப்பவர்களை உற்சாகப்படுத்த இந்த பாடலை பாடினால் கொஞ்சம் வேகமாக இருக்கும் என நினைத்து அதை தேர்வு செய்தேன். முருகப்பெருமான் எல்லோருக்கும் வழிகாட்டுகிறார். எல்லா வளமும் கொடுக்கிறார். எந்த மேடையில் போய் பாடினாலும் அந்தந்த இடங்களின் வரிகளை போட்டு பாடுவேன். அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் யாருக்கும் சம்பந்தமில்லை. ஒருவேளை யாராவது நான் தவறாக நினைத்து பாடி விட்டேன் என நினைத்தால் அவர்கள் அனைவரிடத்திலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.























