"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
"எம்ஜிஆருக்கு ஆக்ஷன் மட்டும்தான் தெரியும்" என்ற சிவாஜி கணேசனின் சவாலுக்கு, 'குடியிருந்த கோயில்' படத்தின் மூலம் எம்ஜிஆர் எப்படி பதிலடி கொடுத்தார்?

தமிழ் சினிமாவின் பொற்காலத்தில் எம்ஜிஆரும், சிவாஜி கணேசனும் இரு பெரும் துருவங்களாக திகழ்ந்தனர். சினிமாவிலும் அரசியலிலும் வெவ்வேறு பாதையில் பயணித்த இருவருக்கும் இடையே பலமுறை போட்டி நிலவியிருந்தாலும், ஒரு தேர்தல் காலத்தில் நடந்த சம்பவம் பின்னாளில் பெரும் பேசுபொருளானது.
எம்ஜிஆருக்கு சிவாஜி கணேசன் சவால்
அந்த காலகட்டத்தில் திமுக சார்பில் எம்ஜிஆரும், காங்கிரஸ் சார்பில் சிவாஜி கணேசனும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரசார மேடையில் பேசிய சிவாஜி, "எம்ஜிஆருக்கு ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடிக்கத் தெரியும். உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. முடிந்தால் என்னைப் போல நடித்து காட்டுங்கள்" என்று சவால் விடுத்ததாக கூறப்படுகிறது.
எம் ஜி ஆர் கொடுத்த பதில்
இந்த விமர்சனத்திற்கு நேரடியாக வார்த்தைகளில் பதிலளிக்காமல், தனது நடிப்பின் மூலம் பதில் சொல்ல முடிவு செய்தார் எம்ஜிஆர். அதன் விளைவாக உருவான படமாகவே 'குடியிருந்த கோயில்' பார்க்கப்படுகிறது.
1968-ல் வெளியான இந்தப் படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஒரு கதாபாத்திரம் கொள்ளைக் கும்பலில் வளர்ந்த இளைஞன்; மற்றொருவர் மேடைப் பாடகராக வாழும் நல்ல மனிதர். சிறுவயதில் பிரிந்த சகோதரர்கள் மீண்டும் சந்தித்து, தந்தையின் கொலைக்கு காரணமான கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தும் கதையை மையமாகக் கொண்டு படம் நகர்கிறது.
ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி, தாய் பாசம், சகோதர பாசம், காதல், உணர்ச்சிப்பூர்வமான பல காட்சிகளில் எம்ஜிஆர் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் பாராட்டினர். இதன் மூலம், தனக்கு ஆக்ஷன் மட்டுமே தெரியும் என்ற விமர்சனத்திற்கும் அவர் திரையரங்கிலேயே பதிலளித்ததாக அப்போது பேசப்பட்டது.
ஜெயலலிதா மற்றும் ராஜஸ்ரீ கதாநாயகிகளாக நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்ற "என்னைத் தெரியுமா?", "ஆடலுடன் பாடலைக் கேட்டு" போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத வெற்றிப்பாடல்களாக மாறின. குறிப்பாக "ஆடலுடன் பாடலைக் கேட்டு" பாடலை படத்தில் சேர்க்க தயாரிப்பாளர் தயங்கியபோதும், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் அதனை வலியுறுத்தி சேர்த்ததாகவும், வெளியான பிறகு அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்ததாகவும் கூறப்படுகிறது.
'குடியிருந்த கோயில்' ஒரு வெற்றிப் படம் மட்டுமல்ல; எம்ஜிஆரின் நடிப்புத் திறன் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அவர் திரையுலகிலேயே அளித்த பதிலாகவும் தமிழ் சினிமா வரலாற்றில் நினைவுகூரப்படும் திரைப்படமாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















