விரும்பிய இடத்தில் ஜிப்பை கழற்றுபவர்களுக்கு புரியாது.. எஸ்.வி.சேகருக்கு சின்மயி பதிலடி!
பாலியல் குற்றங்கள் குறித்து எஸ்.வி.சேகர் பேசிய பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் பாடகி சின்மயி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் கருத்துக்கு பிரபல பின்னணி பாடகி சின்மயி கடுமையான பதிலடி கொடுத்தார்.
விளாத்திகுளம் கொடூர சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அருகே வேடநத்தம் என்ற கிராமம் உள்ளது. இங்கு தனது குடும்பத்துடன் வசித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் இயற்கை உபாதை கழிக்க சென்ற நிலையில் கடந்த மார்ச் 10ம் தேதி மாலையில் காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் தேடி அலைந்த நிலையில் இதுதொடர்பாக புகார் அளிக்க சென்றபோது குளத்தூர் மற்றும் விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய போலீசார் அலைகழித்துள்ளனர்.
இந்த நிலையில் மார்ச் 11ம் தேதி அங்குள்ள காட்டுப் பகுதியில் மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யப்படாத நிலையில் மாணவி உடலை வாங்க பெற்றோர், உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து
இந்த நிலையில் திண்டுக்கலில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகரிடம், தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கும், சட்டம் ஒழுங்கையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியே கழிவறைக்கு சென்றால் கூட துணைக்கு ஆள் செல்ல வேண்டும். சுதந்திரத்தை விட முதலில் நமக்கு பாதுகாப்பு தான் முக்கியம்.
பாலியல் குற்றங்கள் குறித்து பேசும்போது அந்த பெண் புதருக்குள் போனதாக சொல்கிறார்கள். அவர் ஏன் அங்கு போனார். புதருக்குள் போலீஸ் விளக்கு போட முடியுமா? என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். எஸ்.வி.சேகர் பேச்சுக்கு கடுமையான கண்டனம் வலுத்துள்ளது. அந்த வகையில் பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.
எஸ்.வி.சேகர் பேசிய வீடியோவை பகிர்ந்து, இந்தக் காணொளியின் அடிப்படையில், தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண், ஏன் ஒரு வனப்பகுதியில் புதர்களுக்குப் பின்னால் சென்றார் என்று திரு எஸ்.வி. சேகர் கேட்பது போல் தெரிகிறது.
காவல்துறையினரால் அங்கு வந்து எல்லா இடங்களிலும் லைட் போட முடியாது. அந்தப் பெண், கழிவறைகள் மற்றும் குளியலறைகள் இல்லாத மக்கள் செய்வது போல, தனது இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில், இளம் பெண்களும் சிறுமிகளும் இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது சர்வ சாதாரணம். ஆனால், உடல் காயம் ஏற்படும் என்ற பயமின்றி, தாங்கள் விரும்பும் இடத்தில், விரும்பும் போதெல்லாம், பாதுகாப்பாக தங்கள் ஆடையின் ஜிப்பைக் கழற்றி சிறுநீர் கழிக்கக்கூடிய ஆண்களால் இதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது” என பதிலடி கொடுத்துள்ளார்.























