சட்டமன்ற தேர்தலில் திருமாவளவன், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.. பா.ரஞ்சித் போட்ட ட்வீட்!
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக சார்பில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் திருவிக நகர் தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் களமிறங்குகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் விசிக தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆகியோருக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வரவேற்றுள்ளார்.
2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்து வருகின்றன. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக சார்பில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் திருவிக நகர் தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் களமிறங்குகிறார். இவர்களது முக்கியத்துவம் பற்றி இயக்குநர் பா.ரஞ்சித் ட்வீட் போட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களுக்கு இன்றியமையாத தருணம்
இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.
ஆம்ஸ்ட்ராங் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் குரல் ஒலிக்க வேண்டிய அவசியம்
அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விசயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அவரது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















