Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
ஹைதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினூர் ஹோட்டலில் விஸ்வநாத அண்ட் சன்ஸ் படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. படம் ரிலீசாகி ஒரே நாளில் ஏன் இந்த ஏற்பாடு என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒரே நாளில் நடந்துள்ள சம்பவம் திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்
வாத்தி, லக்கி பாஸ்கர் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்த படம் தான் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”. இந்த படத்தில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது. முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில் இப்படத்தை அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
கலவையான விமர்சனம்
இதனிடையே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாதி மற்றும் கிளைமேக்ஸ் காட்சி சிறப்பாக கையாளப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் பாதியில் தேவையில்லாமல் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக படம் பார்த்த நபர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அதேசமயம் இந்த விடுமுறைக்கு குடும்பத்துடன் காண சிறந்த திரைப்படம் எனவும் தெரிவித்தனர். இப்படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.74.47 கோடி உலகளவில் வசூல் பெற்றுள்ளதாக sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் நடந்த வெற்றிக் கொண்டாட்டம்
இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினூர் ஹோட்டலில் இந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. விஸ்வநாத அண்ட் சன்ஸ் படம் ரிலீசாகி ஒரே நாளில் ஏன் அவசரமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, நீங்கள் காட்டும் அன்பிற்கு என் நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. வெங்கி அட்லூரி, நாகவம்சி இருவரும் தெலுங்கு மொழி பேசுபவர்கள், நான் தமிழ் பேசுகிறேன், மமிதா மலையாளம் பேசிவார், ரவீனா மராத்தி பேசுபவர். இப்படி வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து வெவ்வேறு மொழி பேசினாலும் நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம்.
இந்தப் படத்தின் மீது அன்பை பொழிந்து ரசிகர்கள் மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் இதற்கு அற்புதமான வரவேற்பு கிடைத்து வருகிறது.குடும்பப் படங்கள் நம் அனைவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சில படங்களின் வெற்றியை அவற்றின் வசூலைக் கொண்டு அளவிட முடியாது. இந்தப் படத்தின் உண்மையான வெற்றி பார்வையாளர்களின் அனுபவத்தில் தான் உள்ளது என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















