நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ தாண்டி... உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

தேசிய கல்விக் கொள்கை மறு ஆய்வுக் குழுவின் தலைவரும், யுஜிசி முன்னாள் தலைவரும் ஐஐஎம் கல்கத்தாவின் ஆளுநர் குழுத் தலைவருமான ஜெகதீஷ் குமார், நீட், ஜேஇஇ மற்றும் கியூட் போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகள் இந்திய உயர்கல்வியின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
எனினும், பெரும்பாலான இளங்கலை மாணவர் சேர்க்கைகள் மாநில, பல்கலைக்கழக மற்றும் நிறுவன நடைமுறைகள் மூலமாகவே நடைபெறுகின்றன.
ஒரு பொதுவான தேசியத் தேர்வால், தேர்வு நடத்தும் முறையை மட்டுமே மையப்படுத்த முடியுமே தவிர, ஒட்டுமொத்த சேர்க்கை செயல்முறையையும் மையப்படுத்த முடியாது.
தேர்வை யார் நடத்துகிறார்கள் என்பதைத் தாண்டி, தகுதி மற்றும் தரவரிசைப் பட்டியல்களை யார் தீர்மானிக்கிறார்கள், கலந்தாய்வை நடத்தி மாணவர்களை யார் சேர்க்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
, டெல்லி ஐஐடி முன்னாள் பேராசிரியருமான இவர், எக்ஸ் தளத்தில் 'நீட் மற்றும் ஜேஇஇக்கு அப்பால்: இந்திய உயர்கல்வி உண்மையிலேயே மையப்படுத்தப்பட்டுள்ளதா?' என்ற கட்டுரையைப் பகிர்ந்து, உயர்கல்வியின் பிரம்மாண்ட அளவே பல்வேறு சேர்க்கை முறைகளுக்குக் காரணம் என்றார்.
AISHE 2023-24 அறிக்கையின்படி, இந்தியாவில் 3.46 கோடி இளங்கலை மாணவர்கள் உட்பட மொத்தம் 4.5 கோடி பேர் உயர்கல்வி பயில்கின்றனர். 5.69 லட்சம் பேர் ஒருங்கிணைந்த யுஜி பிஜி படிப்புகளிலும், 1.09 கோடி பேர் பல்கலைக்கழகங்களில் யுஜி, பிஜி, பிஎச்டி அளவிலும் படிக்கின்றனர். 1,289 பல்கலைக்கழகங்கள், 48,246 கல்லூரிகள், 15,221 தனித்த நிறுவனங்கள் உள்ளதால் சேர்க்கைக்கு பல வழிகள் தேவைப்படுகின்றன. மாநில கவுன்சிலிங், போர்டு மதிப்பெண்கள், நிறுவன தரவரிசைகளே அதிகம் பயன்படுவதால், இதனை முழுமையாக மையப்படுத்தப்பட்ட அமைப்பு என கூறமுடியாது என விளக்கினார்.
நீட், ஜேஇஇ, கியூட் ஆகியவை ஒரே மாதிரியாக செயல்படவில்லை. இளங்கலை மருத்துவச் சேர்க்கைக்கான சட்டபூர்வ தேர்வான நீட்டை மத்திய, மாநில, தனியார், நிகர்நிலை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. மருத்துவக் கலந்தாய்வுக் குழு தேசிய இடங்களை நிர்வகிக்கிறது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான இடஒதுக்கீடு, இருப்பிட தகுதி விதிகளை மாநில அதிகாரிகளே முடிவு செய்கின்றனர்.
ஐஐடிகள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வையும் என்ஐடி மற்றும் ஐஐஐடி நிறுவனங்கள் ஜேஇஇ மெயின் தேர்வையும் பயன்படுத்துகின்றன. ஜோசா (JoSAA) இடங்களை ஒதுக்குகிறது. சில மாநிலங்கள் ஜேஇஇ மெயின் மதிப்பெண்களைத் தாங்களே சொந்தமாகப் பயன்படுத்துகின்றன; இதை என்டிஏ ஒதுக்குவதில்லை. இவை கட்டாய தேவையுமல்ல.
இதேபோல், கியூட் நுழைவுத் தேர்விலும் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களே சேர்க்கையை முடிவெடுக்கின்றன. பல்வேறு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இதை பல வழிகளில் ஒன்றாகவே பயன்படுத்துகின்றன. கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் பொறியியல் மற்றும் பிற படிப்புகளுக்குத் மாநில அளவிலான தனி நுழைவுத் தேர்வுகள் உள்ளன. எனவே, இந்தியா சில சேர்க்கைக்கு மட்டுமே தேசிய தேர்வுகளையும், மற்றவற்றுக்குப் பரவலாக்கப்பட்ட நடைமுறைகளையுமே பின்பற்றுகிறது என்றும் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























