Menaka Suresh: “கேரளாவில் தாமரை மலர வேண்டும்” - ஓட்டு போட்டபின் கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா விருப்பம்!
கேரளாவில் மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அங்குள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
கேரளாவில் வேறொரு நல்ல ஆட்சி வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகையும், கீர்த்தி சுரேஷ் தாயாருமான மேனகா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அங்குள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதனிடையே அங்குள்ள தைக்காட்டில் வாக்களித்த நடிகை மேனகா சுரேஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “கேரளாவில் கடந்த 15 வருடமாக இருப்பதை காட்டிலும் வேறொரு நல்ல ஆட்சி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கேரளாவில் தாமரை விரிய வேண்டும் என்ற ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார். காலையில் இருந்து நிறைய பேர் ஆர்வமாக ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. ஒரு மாற்றம் எப்போதும் வேண்டும். ஒரே மாதிரியாக போய் கொண்டிருந்தால் நன்றாக இருக்காது அல்லவா! - அதனால் சந்தோசமான ஒரு முடிவு இருக்கும்ன்னு தான் நம்புறேன். இதுவரை இருந்தவர்கள் பெரிதாக பண்ணவில்லை. நாங்கள் நினைக்கிறவர்கள் சிறப்பாக செய்வார்கள் என நம்புகிறேன்.
கீர்த்தி சுரேஷ் பாண்டிச்சேரியில் ஷூட்டிங்கில் இருக்கிறார்கள். நேற்று கூட விமானத்தில் வருவேன் என சொன்னார்கள். ஆனால் தொடர்ச்சியாக வேலை இருப்பதால் வர முடியவில்லை. பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வந்து பின் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து இங்கு வாக்களிக்க வர வேண்டும். இதனால் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்படும். ஏற்கனவே அந்த படம் நீண்ட நாட்களாக சென்று கொண்டிருக்கிறது. வரமுடியவில்லை என சொன்னது வருத்தமாக இருப்பதாக எனக்கு கீர்த்தி சுரேஷ் சொன்னார்கள்” என மேனகா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மேனகா சினிமா பயணம்
1980 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை மலையாளம், தமிழ், தெலுங்கு,கன்னடம்,இந்தி ஆகிய அனைத்து துறைகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தார் மேனகா. தமிழில் கீழ்வானம் சிவக்கும், நெற்றிக்கண், ஓம் சக்தி, தூக்குமேடை, உனக்காகவே வாழ்கிறேன் என குறிப்பிடத்தகுந்த படங்களில் நடித்தார். கிட்டதட்ட 125 படங்களுக்கும் மேல் நடித்துள்ள மலையாள தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் செய்தார். இவர்களுக்கு ரேவதி மற்றும் கீர்த்தி என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.