வாட்ஸ்அப் டிபி பார்த்து கலாய்ச்சாங்க...ட்ரோல்களை கையாள்வது குறித்து விக்னேஷ் சிவன்
சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பகிரும்போது எழும் விமர்சனங்களை தானும் நயன்தாராவும் கையாள்வது குறித்து விக்னேஷ் சிவன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அடிக்கடி சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விக்னேஷ் சிவன் விமர்சனங்களை தாங்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பது குறித்து பேசினார்.
நம்பிக்கை கொடுத்த நயன்தாரா
நான் நயன்தாராவை முதன்முதலில் சந்தித்தபோது, என் படத்திற்காக அவருடைய தேதிகள் எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருந்தேன், ஆனால் நான் தன்னம்பிக்கையான மனநிலையில் இல்லை. மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அவர் என்னிடம் தைரியமாகவும் உறுதியாகவும், “நீங்க டைரக்டர் நீங்க சொல்றத செய்யுறதுதான் என் வேலை” என்று சொன்னார்.
அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதல்ல. பொதுமக்களைப் போலவே, நானும் அவருடைய கடந்தகால உறவுகள் அனைத்தையும் பார்த்து, அவரைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கியிருந்தேன். ஆனால் நிஜ வாழ்க்கையில், அது முற்றிலும் வேறுபட்டிருந்தது, வாழ்க்கை எவ்வளவு நியாயமற்றதாக இருக்க முடியும் என்பதை நான் உணர்ந்தேன். ஆனால் அதுதான் உண்மை. நாம் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை; நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டும் போதும்
வாட்ஸப் டிபி பார்த்து கலாய்த்தார்கள்
எங்கள் காதலின் ஆரம்பக் கட்டத்தில், நாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளத் தொடங்கியபோது, அவர் எங்கள் இருவரின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டிஸ்ப்ளே பிக்சராக வைத்தார். எப்படியோ, யாரோ அதை பொதுமக்களுக்குக் கசியவிட்டனர். அந்த நேரத்தில், நான் ட்ரோல் செய்யப்பட்டேன், அது வலிக்கவும் செய்தது. சமூக ஊடகங்கள் வித்தியாசமானவை—நான் என் மகிழ்ச்சியான தருணங்களைப் பதிவிட்டாலும்கூட, பலர் ஒருவித அவநம்பிக்கையான மனநிலையில் இருப்பதாக உணர்வதால், நான் கேலிக்கு உள்ளாகிறேன். ஆரம்பத்தில் அது வலிக்கத்தான் செய்தது, ஆனால் இப்போது நாங்கள் இருவரும் அதை “உனக்காச்சும் இப்டி என்ன வச்சு செய்றாங்க"என்று ஒரு கவுண்டமணி நகைச்சுவையைப் போல சிரித்துத் கடந்துவிடுகிறோம்.
எல்.ஐ.கே
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா , க்ரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் , சீமான் , யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளது.























