TVK Vijay: உண்மை தெரிந்தால் விஜய் ஆட்டம் முடியும்.. தவெகவினரை வம்பிழுக்கும் மோகன் ஜி!
2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்கவில்லை என அறிவித்துள்ள நிலையில் இயக்குநர் மோகன் ஜி விஜயை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.

கரூர் சம்பவத்தில் விஜய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவரின் ஆட்டம் முடியும் என இயக்குநர் மோகன் ஜி விமர்சித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 23ம் தேதி 2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களமிறங்கவுள்ளது. இப்படியான நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தனித்து போட்டி என அறிவித்து விட்டார். இது தவெக கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்த தரப்பினருக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கரூர் சம்பவம் மீண்டும் கிளறப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை உண்டாக்கியது. இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 3 முறை நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
இதனிடையே மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறப்பு விழாவில் விஜய் பங்கேற்றார். அப்போது எந்த கூட்டணியிலும் இணையவில்லை, தவெக தலைமையில் தான் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தினார். அடுத்த சில மணி நேரத்தில் கரூர் சம்பவம் குறித்தும், அதில் விஜய் மீது தான் தவறு உள்ளது என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியாக தொடங்கியது. இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக ஆதவராளராக அறியப்படும் யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான வீடியோ பதிவுகள் அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தான் கரூர் டிரோன் காட்சிகள் விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் மீட்கும் பணியானது சமீபத்தில் செய்யப்படுள்ளது என தகவல். இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும் , அவர் வண்டியில் இருந்த கேமரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.
இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை. பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரணைக்கு” என தெரிவித்திருந்தார்.
இதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ஜி, ”கரூர் சம்பவத்தின் காட்சிகளை பதிவு செய்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்தும், மொபைல் டவர் தரவுகள், இருப்பிடத் தோராயக் கணிப்புகள், மற்றும் சிடிஆர் பதிவுகள் போன்ற உறுதியான ஆதாரங்களைப் பயன்படுத்தி சிபிஐ அறிவியல் பூர்வமாக நிரூபிப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால், ஆட்டம் முடிந்தது” என தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரவில்லை என்பதற்காக மோகன் ஜி விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















