18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
மயிலாடுதுறை இளம் காதலர்கள் தற்கொலை குறித்து திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மயிலாடுதுறை இளம் காதலர்கள் தற்கொலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மோகன் ஜி பதிவிட்டுள்ளார். கொலை என்பது எந்த வடிவத்தில் நடந்தாலும் தவறு என்று கூறியிருக்கும் அவர் 18 வயதிற்கும் கீழான பெண்களை காதலித்து அவர்களை பெற்றோர்களுக்கு எதிராக பேசவைப்பதையும் கண்டித்து பதிவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இளம் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பார்த்திபன் மற்றும் சாத்தங்குடியைச் சேர்ந்த 16 வயதான திவ்யதர்ஷினி ஆகியோர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் உறவுக்கு இரு குடும்பங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சாத்தங்குடியில் உள்ள ஒரு கொட்டகையில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததாக அதிகாலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொறையார் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்கொலையா அல்லது ஆணவக் கொலையா என்ற இரு கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சம்பவத்தைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே பதற்றமான சூழல் நிலவியதாகவும், சில இடங்களில் வாகனங்கள் மற்றும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மயிலாடுதுறையில் சம்பவம் குறித்து மோகன் ஜி
இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் இப்படி பதிவிட்டுள்ளார் " கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் அது கொடியது.. ஆணவ கொலையாக இருந்தாலும் சரி, போதையால் நடந்தாலும் சரி, பகையால் நடந்தாலும் சரி.. மிகவும் கண்டிக்கத்தக்கது..அதே நேரத்தில், காதல் என்ற பெயரில் 13 வயது சிறுமியை காதலிக்க தொடங்கி, 16 வயதிலேயே சாதியை காரணம் காட்டி , பெற்றோர்களை எதிர்க்க வைத்து, பெற்ற மகளை 18 வயது வரையாவது தன் கட்டுப்பாட்டில், பாதுகாப்புபாக, படிக்க வைத்து வளர்க்க நினைப்பதையே குற்றமாக மாற்ற நினைப்பது நம் தமிழ் சமூகத்தில் மட்டும் தான் நடக்கும்.. திருமண வயது 18 என்பது, 18 வயது முடிந்த மறுநாளே பிள்ளை பெற்று கொள்ள தயாராகத்தான் என்பதல்ல.. 18 முடிந்த பிறகு தான் தன் வாழ்க்கை பற்றிய சுயமுடிவு எடுக்கும் பக்குவம் வருவது என்பதாகும்.. எதிர்ப்பதாக இருந்தால் சிறுமி வயதில் காதலிப்பதையும் சேர்த்து எதிர்த்து நில்லுங்கள்.. வெறுமனே உங்க சுயசாதி பக்கம் நிற்பது அறமல்ல.. மீண்டும் சொல்கிறேன், கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது..." என மோகன் ஜி பதிவிட்டுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















