‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி
சிம்பு ‘அரசன்’ படத்தின் காட்சிகளை பார்த்து பாராட்டியதுடன், படத்திற்காக எப்போது அழைத்தாலும் தேதிகள் வழங்கத் தயார் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் TR நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கியுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.
வடசென்னை கதையுலகை மையப்படுத்தி வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ் தானு இப்படத்தை தயாரித்து வருகிறார். கிஷோர் , சமுத்திரகனி , ஆன்ட்ரியா என தனுஷின் வடசென்னை படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இந்த படத்திலும் நடித்து வருகிறார்கள். கூடுதலாக டூரிஸ்ட் ஃபேமிலி யோகலட்சுமி , கென் கருணாஸ் , விஜய் சேதுபதி ஆகிய புதிய நடிகர்களும் படத்தில் இணைந்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
அரசன் படம் பார்த்து அசந்துபோன சிம்பு
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் அரசன் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த நிலையில், ‘அரசன்’ படத்தின் சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் எடிட் செய்யப்பட்ட காட்சிகளை இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் சிலம்பரசனிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது. படத்தின் காட்சியமைப்பு, நடிப்பு மற்றும் ஒட்டுமொத்த உருவாக்கம் ஆகியவை சிம்புவை மிகவும் கவர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்லிமிடட் டேட்ஸ்
காட்சிகளை பார்த்த பிறகு, படக்குழுவினரிடம் சிலம்பரசன் தனது முழுமையான ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, இனிமேல் படப்பிடிப்புக்கு எப்போது அழைத்தாலும் தான் தயாராக இருப்பதாகவும், படத்துக்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தேதிகளை ஒதுக்கித் தருவதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் ‘அரசன்’ படத்தின் மீதான சிலம்பரசனின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளதாகவும், படப்பிடிப்பில் அவர் தீவிரமாக பங்கேற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ‘அரசன்’ படத்தின் காட்சிகள் படக்குழுவைச் சேர்ந்த மற்றவர்களையும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் காட்சிகளை பார்த்த அனிருத், அவற்றை வெகுவாக பாராட்டியதாகவும், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை தொடர்புகொண்டு ‘அரசன்’ காட்சிகள் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருபுறம் வெற்றிமாறனின் இயக்கம், மறுபுறம் சிலம்பரசனின் நடிப்பு, அதனுடன் அனிருத் இசை என ‘அரசன்’ படத்தின் ஒவ்வொரு அம்சமும் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இதுவரை படக்குழுவினர் வெளியிட்ட தகவல்களை விட, படத்தை பார்த்தவர்களிடமிருந்து வெளியாகும் பாராட்டுகள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















