கேஸ் தட்டுப்பாடு.. வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே?.. விஜயை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அளித்துள்ள வாக்குறுதியில் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் அன்னப்பூரணி திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் டீசர் போல வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே என தவெக தலைவர் விஜய்க்கு சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கேள்வியெழுப்பியுள்ளார்.
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் அளித்துள்ள வாக்குறுதியில் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் அன்னப்பூரணி திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தவெக தலைவர் விஜய் இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை.
இதனை குறிப்பிட்டு எக்ஸ் வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன், “தேர்தலில் ஜெயித்தால் வீட்டுக்கு ஆறு சிலிண்டர் தருவேன் என்றீர்கள். அதற்கு டீசர் போல.. போர்க்கால அடிப்படையில் வீட்டுக்கு ஒரு சிலிண்டர் தரலாமே? .. சிலிண்டர் விலையை 60 ரூபாய் ஏற்றியபோது.. ஏன் பக்கம் பக்கமாக உங்கள் தனி பாணியில் ஒரு அறிக்கை கூட விடவில்லை?.. விலையேற்றத்திற்கு எதிராக ஏன் போராடவில்லை?.. ஈரான் போருக்கு கூட காரணம் திமுகதான்.. என அந்த பழியையும் தூக்கி அக்கட்சி மேல் இன்னும் ஏன் போடவில்லை?” என ப்ளூ சட்டை மாறன் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேபோல் இன்னொரு பதிவில், “மௌனவிரத மாஸ்டர் என குறிப்பிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு வர சொல்வேன். கரூரில் இறந்தோர் குடும்பத்தினரையும் பனையூருக்கு வர சொல்வேன். கொள்கை தலைவர் பெரியார் பற்றி மிக இழிவாக யார் பேசினாலும் நான் அவர்களை கண்டிக்க மாட்டேன்.கொள்கை தலைவர்கள் அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் பற்றி அடிக்கடி பேசுவேன். காமராஜர், அம்பேத்கர், பெரியார் பற்றி 99% பேச மாட்டேன்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச மாட்டேன். தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்து விட்டதென வெறியாவேன். ஆனால் நான் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடுவேன் என கூற மாட்டேன். லஞ்சம், ஊழல் பெருத்து போச்சு என கத்துவேன். ஆனால் என் படங்களுக்கு ப்ளாக் டிக்கெட் விற்பது, வாங்குவது பற்றி எந்த காலத்திலும் பேச மாட்டேன்.
கீர்த்தி சுரேஷ் கல்யாணத்திற்கு போவேன். ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கு போக மாட்டேன். வீட்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருவேன். ஆனால் சிலிண்டர் விலை ஏறியது பற்றி பேச மாட்டேன். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு மோசம் என போராடுவேன். ஆனால் தமிழ்நாட்டிற்கு கல்விநிதி தராத மத்திய அரசை எதிர்த்து போராட மாட்டேன். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அடிக்கடி பொங்குவேன். ஆனால் த்ரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்க மாட்டேன்.
ஜனநாயகன் சென்சார் பிரச்னைக்கு காரணம் பாஜக அரசு என நாஞ்சில் சம்பத் பேசுவார். ஆனால் நான் வாய் திறக்க மாட்டேன். கரூர் சிபிஐ விசாரணையை தமிழ்நாட்டில் நடத்த சொல்வேன். நான் இன்று டெல்லிக்கு வர முடியாது என காரணம் சொல்வேன். ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட மாட்டேன்” விஜயை தாக்கி பேசியுள்ளார். அவருக்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.























