விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான முன்பதிவுகள் மந்தமாக காணப்படுகின்றன.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன்பதிவு எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக நடைபெறாதது ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பல முக்கிய திரையரங்குகளில் முன்பதிவு தாமதமாகத் தொடங்கியதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பெரிய ரிஸ்க் எடுத்த பிரீமார்க் புரொடக்ஷன்ஸ்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை பிரீமார்க் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிட இருக்கிறது . சமீபத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதே நம்பிக்கையில் இந்தப் படத்திற்கும் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், கருப்பு படத்தின் வெற்றியைப் போலவே இந்தப் படமும் வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், விநியோகஸ்தர்களுக்கு இது மிகப்பெரிய ரிஸ்க்காக மாறியிருக்கிறது.
ரூ.40 கோடி MG.. ரூ.150 கோடி வசூல் தேவை?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை சுமார் ரூ.40 கோடி MG அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. GST, பிரிண்டிங், பப்ளிசிட்டி உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்தால் மொத்த முதலீடு சுமார் ரூ.46 கோடி வரை செல்லும் என கூறப்படுகிறது. இதனால் விநியோகஸ்தர்கள் லாபம் பார்க்க, படம் சுமார் ரூ.120 கோடி அளவுக்கு வசூல் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும், அதற்கு மேல் லாபம் கிடைக்க ரூ.150 கோடியை நெருங்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருப்பு கொடுத்த நம்பிக்கை
கருப்பு திரைப்படத்தின் வெற்றி விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் சூர்யா படங்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நம்பிக்கையிலேயே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கும் நல்ல திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிக சதவீதம் மற்றும் பல்வேறு விநியோக நிபந்தனைகள் தொடர்பாக ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் வெளியீட்டுக்கு முன்பான சூழலை சிக்கலாக்கியுள்ளதாக தெரிகிறது.
புக்கிங் தாமதம் ஏற்படுத்திய பாதிப்பு
இந்தப் பிரச்சினைகளின் காரணமாக பல இடங்களில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் முன்பதிவு மிகவும் தாமதமாகத் தொடங்கியதாக தெரிகிறது. இதனால் வெளியீட்டுக்கு முந்தைய நாளான இன்றுவரை பல திரையரங்குகளில் முன்பதிவு எதிர்பார்த்த அளவில் வேகம் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக படம் மீதான ஆரம்பகட்ட வரவேற்பு குறைவாக இருப்பது போன்ற தோற்றமும் உருவாகியுள்ளது.
நாளை தெரியும் உண்மையான நிலவரம்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மீது விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். கருப்பு படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளியாகும் சூர்யாவின் படம் என்பதால், அதன் வசூல் மீது கூடுதல் கவனம் உள்ளது. முன்பதிவு மந்தமாக இருப்பது கவலையை ஏற்படுத்தினாலும், படம் வெளியாகிய பிறகு ரசிகர்களின் வரவேற்பு மற்றும் முதல் நாள் வசூலே இந்த கணக்குகளை மாற்றுமா என்பது நாளை தெரியவரும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















