அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அசோக் செல்வன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படம் அழகான காதல் கதையுடன் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.
‘அன்பில் அவன்’ படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இவர்களுடன் சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஆர்.கே. செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டனர். ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர். கார்த்திகேயன், ‘அன்பில் அவன்’ பெண்களின் கனவு, அதை அடைவதற்கான முயற்சிகள், போராட்டங்கள் மற்றும் சவால்களை காதலுடன் பேசும் திரைப்படம் என்று தெரிவித்தார். மேலும், அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் திரை இணைப்பு படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்றும் கூறினார்.
இதுகுறித்து பேசிய அசோக் செல்வன், இப்படத்தின் கதை புதிதானது அல்ல என்றாலும், அதன் திரைக்கதை மற்றும் திரையரங்க அனுபவம் வித்தியாசமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். படத்தில் பெண்கள் ரசிக்கக்கூடிய பல காட்சிகளுடன் மாஸ் தருணங்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ‘அன்பில் அவன்’ காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பதை சொல்லும் கதை என்றும், காதல் புத்திசாலியை முட்டாளாக்கும்; சாதாரணமானவனை சாதனையாளராக்கும் என்ற கருத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அசோக் செல்வன் தெரிவித்தார்.
கோவிந்த் வசந்தாவின் இசை இப்படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என்றும், ‘96’ படத்தைப் போலவே இப்படத்தின் இசையும் பேசப்படும் என அசோக் செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















