வாழ்க்கையை மாற்றிய தவறான முடிவு.. இன்றளவும் வருத்தப்படும் நடிகை மோகினி.. என்னாச்சு?
படிப்பை விட்டு விட்டு ஒரு கேரியரை தேர்வு செய்வது என்பது தவறானது. நமக்கு கடவுள் இதுதான் உனக்கானது என தேர்வு செய்திருப்பார் என நடிகை மோகினி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய இளமை பருவத்தில் தான் எடுத்த தவறான முடிவு பற்றி நடிகை மோகினி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தமிழில் 1991ம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் நடிகையாக மோகினி அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். அவரின் கண்கள் காரணமாகவே இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் நினைவுக்கூரப்படும் அளவுக்கு பிரபலமாக திகழ்ந்தார். இதனிடையே மோகினி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தன் வாழ்க்கையில் நடைபெற்ற விஷயங்களை நினைவுக் கூர்ந்துள்ளார்.
அதில், “நான் 13 வயதில் நடிக்க வந்து விட்டேன். அதனால் குழந்தை பருவத்தில் அனுபவிக்க வேண்டியதை தவற விட்டேன். அப்போது அந்த 13 வயதில் இருந்த பெண்ணுக்கு நடிக்காத, படிப்பில் கவனம் செலுத்து என சொல்ல நினைக்கிறேன். படிப்பை விட்டு விட்டு ஒரு கேரியரை தேர்வு செய்வது என்பது தவறானது. நமக்கு கடவுள் இதுதான் உனக்கானது என தேர்வு செய்திருப்பார். என்னிடம் 13 வயதில் சினிமாவில் நடிப்பியா என கேட்டபோது என் நண்பர்களிடம் சொல்லி சந்தோஷப்படலாம் என்று மட்டும் தான் நினைப்பேன்.
நான் வழுவூர் ராமையா பிள்ளையாவிடம் தான் டான்ஸ் கத்துகிட்டேன். அப்போது சுனிதான்னு ஒரு நடிகை இருந்தார். தமிழில் அவர் கோடை மழை வித்யா என அறியப்பட்டார். 9 வயதாக இருக்கும்போது ஒருநாள் அவர் சிவப்பு நிற ஆடையில் நன்றாக மேக்கப் போட்டுக் கொண்டு டான்ஸ் கிளாஸ்க்கு வந்திருந்தார். நாங்கள் அனைவரும் வாயை பிளந்து சினிமாவில் நடித்தால் இப்படியெல்லாம் மேக்கப் போடுவாங்க போல நினைத்தோம். சுனிதா கோடை மழை படத்தில் நடிக்க தேர்வாகி இருந்தார். அது முதல் அவரின் தோற்றம் மாறி இருந்தது.
எனக்கு அவர் மீது அனைவரின் பார்வை இருந்ததைக் கண்டு நடித்தால் இப்படியெல்லாம் இருக்கலாம் போல என தோன்றியது. அப்படியாக தான் சினிமா வாய்ப்பு எனக்கு வந்தபோது பல விஷயங்கள் மனதிற்குள் தோன்றியது. சிறு வயது முதல் நான் எங்கு சென்றாலும் என்னுடைய கண்கள் காரணமாக அனைவரின் பார்வையும் என் மீது இருக்கும்.
அதைவிட ஒரு சிறப்பு கவனம் சினிமாவில் நடித்தால் கிடைக்கும் என நினைத்தேன். இருந்தாலும் அந்த வயதில் அப்படி யோசித்தது தவறு தான். சினிமாவுக்குள் வந்த பிறகு 2 நாட்கள் அந்த எண்ணம் இருந்தது. ஆனால் அதன்பிறகு இல்லை.
வாழ்க்கையில் நல்லவளாக பிறக்கவே கூடாது. அப்படியே பிறந்தாலும் கத்தோலிக்க கிறிஸ்தவராக வாழக்கூடாது. ஏனென்றால் பொய் சொல்ல முடியாது. அதனால் என்னால் அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியவில்லை. காலேஜ் கட் அடிப்பது, சைட் அடிப்பது, ஆசிரியருக்கு பயந்து இரவு பகலாக படித்து பாஸ் பண்ணுவது என எதுவும் இல்லை. இது சரி, தவறு என சொல்வதைக் காட்டிலும் இவை தான் ஒருவரின் கேரக்டரை செதுக்கக்கூடிய விஷயமாக அமையும்” என மோகினி தெரிவித்துள்ளார்.























