நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது
நடிகை அதுல்யா ரவி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த அதுல்யா ரவி, கடந்த 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏமாளி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்தும் வருகிறார். வடவள்ளி மருதம் சாலையில் உள்ள வீட்டில் அதுல்யா ரவி, தனது தாயார் விஜயலட்சுமியுடன் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது. அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி, வீடு முழுவதும் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
வேலைக்கார பெண் கைது
இதையடுத்து விஜயலட்சுமி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி (46) என்பவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி (40) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















