அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுனுடன் உருவாகும் ‘AA23’ படத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

டிசி படத்தின் வெற்றிக்குப் பின் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களால் மீண்டும் கொண்டாடப்பட்டு வருகிறார். கூலி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோது லோகேஷ் கனகராஜை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தார்கள். தன்னைப் பற்றிய ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
மாநகரம் , கைதி , மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இயக்குநராக லோகேஷ் கனகராஜ் உருவெடுத்தார். லியோ திரைப்படம் இரண்டாம் பாதி கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான கூலி திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
கருணையே இல்லாமல் ட்ரோல்
கூலி திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். நேர்காணல்களில் அவர் பேசியது கருத்துகள் விமர்சனத்திற்கு உள்ளாகின. அதே நேரம் லோகேஷ் கனகராஜை மீம் மெட்டிரியலாக பயன்படுத்தி வைரலாக்கி வந்தனர். அருண் மாதேஸ்வரனின் டிசி திரைப்படத்தில் லோகேஷ் நடிப்பதாக தகவல் வெளியானபோதும் இப்படத்தின் டீசர் வெளியானபோது ரசிகர்கள் அவரது நடிப்பை விமர்சித்தார்கள்.
டிசி மூலம் கம்பேக்
தற்போது டிசி திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ள நிலையில் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் மீண்டும் கொண்டாட தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக இப்படத்தில் அவரது நடிப்பு பரவலாக பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
இந்த நிலையில் ட்ரோல்கள் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், தனது தாயாரே சில நேரங்களில் அந்த ட்ரோல்களை தனக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். ட்ரோல்களை பார்த்து பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தங்களது படைப்பில் சிறப்பாக செயல்பட்டால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றும், அதே நேரத்தில் ஏதேனும் தவறு நடந்தால் ட்ரோல் செய்வார்கள் என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது முந்தைய இரண்டு படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையாததால் தற்போது தன்னைப் பற்றி அதிகளவில் ட்ரோல்கள் பதிவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல், தனது அடுத்த படத்தின் மீது கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூன் படம் குறித்து
தற்போது அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கி வருவதாக குறிப்பிட்ட லோகேஷ், அந்தப் படத்தின் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். படம் வெளியாகும் போது தற்போது வெளியாகும் ட்ரோல்கள் தானாகவே நின்றுவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் ‘AA23’ திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















