பாட்ஷா படம் வெளியாகி 30 ஆண்டு நிறைவு...Dolby Atmos ஒலியில் மீண்டும் திரையரங்கில்!
சுரேஷ் கிருஷ்ணா இயக்கி ரஜினி நடித்த கல்ட் கிளாசிக் திரைப்படமான பாட்ஷா திரைப்படம் 30 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ரீரிலீஸ் ஆக இருக்கிறது

பாட்ஷா ரீரிலீஸ்
ரஜினியின் கரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்த படம் 1995 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா. ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கு பலவிதங்களில் இன்றுவரை உதாரணமாக பாட்ஷா திரைப்படம் இருந்து வருகிறது. ஆட்டோ ஓட்டி தனது தங்கை தம்பியை படிக்க வைக்கும் பாசக்கார அண்ணன். வன்முறையைக் கண்டால் ஒதுங்கி போகும் இந்த அண்ணன் தனது குடும்பத்திற்கு ஒன்று என்று வருகையில் நாயகனாக விஸ்வரூபம் எடுக்கிறார். அரங்கம் அதிரும் பின்னணி இசையோடு மானிக்கம் பாட்ஷாவான ஃபிளாஷ்பேக் சொல்லப்பட்ட விதம் இன்றும் கூஸ் பம்ப்ஸ் வரவைக்கும் படம் என்று சொல்லலாம். இப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு திரையரங்கில் ரீரிலீஸ் ஆக இருக்கிறது.
Dolby Atmos ஒலியில்
பாட்ஷா படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யா சினிமாஸ் வெளியிட்ட அறிக்கை இதோ " அருளாளர் ஐயா ஆர்.எம். வீரப்பன் உருவாக்கிய சத்யா மூவீஸ்-ன் மரபை அதே கலை நுணுக்கத்துடனும், வீரியத்துடனும் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
கடந்த 60 ஆண்டுகாலமாக திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்ற சத்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புகழை கொண்டாடும் வேளையில், ரசிகர்கள் நெஞ்சம் கவர்ந்த எங்களின் ஆகச்சிறந்த படைப்புகளான இதயக்கனி மற்றும் பாட்ஷா ஆகிய வெற்றித் திரைப்படங்களை மீண்டும் வெளியிடுகிறோம் அவை இப்போது காட்சி ரீதியாக மேம்படுத்தப்பட்ட 4K மற்றும் Dolby Atmos ஒலியில், அதிநவீன தொழில்நுட்பத்தால் மீட்டு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மக்களால் கொண்டாடப்பட்ட பாட்ஷா திரைப்படம் ஜூலை 18 2025 அன்று அற்புதமான புதிய வடிவத்தில் திரையரங்குகளுக்குத் திரும்ப வர இருக்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை இது வழங்கும், Atmos இல் முழு ஒலிப்பதிவையும் மீண்டும் உருவாக்கி முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் புரட்சிகரமான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். பாட்ஷா மற்றும் இதயக்கனி திரைப்படங்கள் உணர்வுபூர்வமான விருந்தை வழங்கும். எங்களின் அடுத்த தயாரிப்பான RMV: தி கிங்மேக்கர் - உங்கள் அறிவுசார் பசியைப் பூர்த்தி செய்யும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பை வடிவமைத்த ஒரு தொலைநோக்கு பார்வையாளரின் அரசியல் மற்றும் கலாச்சார மரபை காட்சிப்படுத்தும் ஒரு ஆழமான நுண்ணறிவு மிக்க ஆவணத் திரைப்படமாகும். காண்பதற்கரிய காட்சிகள் மற்றும் சிந்தனைமிக்க கதைசொல்லல் ஆகியவற்றைக் கொண்ட இந்த ஆவணத் திரைப்படம் ஜூலை 25 2025 அன்று திரைக்கு வர இருக்கிறது. இந்த படைப்பு உங்களை சிறந்த தகவல்களுடன் ஊக்கமளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நன்றி





















