தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தைரியமாக புகாரளிக்க பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்படுவோர் துணிந்து புகாரளிக்க முன்வந்துள்ளனர், இதனால் போக்சோவில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன என டிஜிபி தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை உட்பட அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சட்ட ஒழுங்கு சூழல் குறித்தான விவாதம் எழுந்த நிலையில் அதனை விவரிக்க உள்துறைச் செயலர், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.
குறைந்துள்ள குற்றங்கள்
கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. 2021ம் ஆண்டில் 422 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவான நிலையில், 2025ம் ஆண்டு அது 401 வழக்குகளாக குறைந்துள்ளன. சட்டம் ஒழுங்கு சூழல் தொடர்பாக உண்மைக்கு மாறாக சில மாதங்களாக ஒரு செய்திகள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன
இது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இன்று செய்தியாளர்களை சந்திக்கிறோம். 2021ல் 1597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2025ல் இது 1461 ஆக குறைந்துள்ளன என்றார்.
லாக் அப் மரணம் - சிபிஐ விசாரிக்கும்
காவல் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது. காவல் நிலைய மரணங்கள் நடைபெறக் கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு. கடந்த முறை அஜித் குமார் கொலை வழக்கில் அரசின் நிலைப்பாடு என்ன மற்றும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிபிசிஐடி அந்த வழக்கை நன்றாக விசாரிக்கும் என்றாலும், சம்பந்தப்பட்டவர்கள் போலீஸார் என்பதால், வெளிப்படைத்தன்மை காரணமாக சிபிஐ-க்கு வழக்கை அரசு மாற்றியது.
இளைஞர் ஆகாஷ் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல் மரண வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.
காவல் துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
மக்களை எப்படி அணுக வேண்டும், விசாரணையை எப்படி நடத்துவது என தெளிவாக காவல் துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்புகள் பெறப்படுகின்றன.
நிரந்தர டிஜிபி விவகாரம்
2021-ஆம் ஆண்டில் 6,800 போதைப்பொருள் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போதைப் பொருள் தடுப்புப் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியதால் தற்போது வழக்குகள் அதிகரித்துள்ளன. நிரந்தர டிஜிபி விவகாரம் குறித்து யுபிஎஸ்சி-க்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகு இது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
விழிப்புணர்வால் அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்
இதன் பின்னர் பேசிய பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் “பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம். தைரியமாக புகாரளிக்க ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்படுவோர் துணிந்து புகாரளிக்க முன்வந்துள்ளனர். குறிப்பாக “தைரியமாக புகாரளிக்க பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்படுவோர் துணிந்து புகாரளிக்க முன்வந்துள்ளனர். இதனால் போக்சோவில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன சிறிய குற்றங்கள் என்றாலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது என்றார்
விளாத்திகுளம் வழக்கு
விளாத்திகுளம் அருகே சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் சிறுமியின் பெற்றோரை அலைக்கழித்த புகார் எழுந்த உடனேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணையும் நடக்கிறது என்று பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் விளக்கமளித்தார்.
























