ஒவ்வொரு மாதமும் பள்ளி மாணவர்களுக்கு திறன் மதிப்பீட்டுத் தேர்வு: முக்கிய விதிமுறைகள் வெளியீடு
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு/ திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளில் தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome, Competency Based Test) நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு/ திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும். இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பாக பிற்பகல் 2 மணி முதல் தேர்விற்கு முன்பாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் பணியானது தலைமை ஆசிரியர் முன்னிலையில் செய்திருக்க வேண்டும். வினாத்தாள்களைப் பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 11417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தேர்வு எப்படி?
ஒவ்வொரு கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் (Learning Outcome , Competency Based Test) தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யத்தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பென்ணைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அத்தாள்களிலேயே மாணவர்களைக் குறிப்பிட.ச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாட வேளையில் குறிப்பிட்டுள்ள நாளன்று தவறாமல் நடத்த வேண்டும்.
இத்தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக அந்நாள்வரை வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும். எவ்விதக் குறுக்கீடும் இன்றி மாணவர்கள் தாங்களாகவே விடைத்தெரிவுகளை மேற்கொள்வதைத் தலைமையாசிரியர்களும் வகுப்பாசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களுடன் தொடர் கலந்துரையாடல்
தேர்வுக்குப் பின் வரும் கற்பித்தல் நாட்களில், இவ்வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள், வினா அமைப்பு, தேர்வுகளில் இவ்வகை வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து தாங்கள் கற்பிக்கும் பாடத்தினூடாக அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு முறை என 6 முதல் 9 வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் (Learning Outcome, Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு எஸ்சிஇஆர்டி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 முதல் 2025 ஜனவரி 31ஆம் தேதி வரை கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்






















