இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
பார்த்திபன் தன்னுடைய படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகியபோது அவர் முடியாது என்று மறுத்ததும், பார்த்திபன் அவர் காலில் விழுந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர், இயக்குனர் பாக்யராஜ். இவரது ஆரம்ப கால படங்கள் பலவற்றிற்கும் இளையராஜா இசையமைத்தார். இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாக்யராஜ் அவரது சில படங்களுக்கு அவரே இசையமைத்தார்.
இளையராஜா காலில் விழுந்த பாக்யராஜ்:
இந்த நிலையில், இளையராஜாவுடன் பாக்யராஜுற்கு ஏற்பட்ட மோதலால் பாக்யராஜுன் உதவியாளர்களுக்கும் இசையமைக்க இளையராஜா மறுத்துள்ளார். இதுதொடர்பாக, பார்த்திபன் ஒரு முறை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
"பாக்யராஜ் இசையமைக்கிறேன் என்றார். நான் அனைத்து இயக்குனர்களுக்கும் முதல் படம் ராஜா சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்றேன். நான் அதை கண்டிஷனாக சொல்கிறேன் என்று பாக்யராஜ் சாருக்கு தெரிந்தது. அதனால், என்னையும் பழனிச்சாமியையும் அனுப்பிவிட்டார்.
நீ போய் கேளு, ஓகே சொன்னார் என்றால் பண்ணலாம் என்றார். நானும், அவரும் மாறி, மாறி காலில் விழுந்து கும்பிடுவோம். அவர் முதலில் கெட் அவுட் என்பார். நீ போய் ஆர்மோனி பெட்டி வாங்கி வாசி என்பார். பாக்யராஜ் இசையமைப்பாளர் ஆகிவிட்டார். நீயும் ஆகு என்றார். உனக்கு ஏன் நான் பண்ணனும்? என்றார்.
இளையராஜா முடிவு:
பாக்யராஜின் உதவியாளர்கள் யாருக்கும் போடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். நானும், பழனிசாமியும் மாறி, மாறி காலைத் தொட்டு கும்பிடுவோம். இல்ல சார், நான் எல்லாம் கடைசி வரை இசை எல்லாம் பண்ணவே மாட்டேன் சார். அதை இப்போது வரை காப்பாத்துறேன். "
இவ்வாறு அவர் கூறினார்.
பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த பார்த்திபன் முதன்முதலில் இயக்கிய படம் புதிய பாதை. இந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருப்பார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருப்பார். பின்னர், அவர் இயக்கிய 2வது படமான பொண்டாட்டி தேவை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். உள்ளே வெளியே படத்திற்கும் இசையமைத்தார்.
இளையராஜா ஏன் அப்படி நடந்து கொண்டார்?
பார்த்திபன் நடிகராக பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபகாலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார். பார்த்திபன் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அழகி படத்திற்கு இளையராஜாவே இசையமைத்துள்ளார்.
இளையராஜாவை அவரது இசையரங்கத்தில் நேரில் சென்று பாக்யராஜ் சந்திக்கச் சென்றபோது, அவரை வீட்டிற்குச் சென்று சந்திக்குமாறு பாக்யராஜுடம் இளையராஜா உதவியாளர் கூறியது இருவருக்கும் இடையே மனக்கசப்பு உருவாக காரணமாக அமைந்துள்ளது.
பின்னர், இது பெரியதாக விஸ்வரூபம் எடுக்க பாக்யராஜ் தான் இயக்கிய சில படங்களுக்குத் தானே இசையமைத்தார். இது இளையராஜாவிற்கு கோபத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, பாக்யராஜின் உதவியாளராக இருந்த பார்த்திபனிடம் இளையராஜா இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.























