தலைக்கேறிய போதை: காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர்!
பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரித்துவாரமங்கலத்தில் போதையில் காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சமீப காலங்களில் தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நடைபெற்ற நிலையில் காவல்துறையினருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் குற்றம்சாற்றப்பட்டவர்களை கைது செய்யக்கூடாது மற்றும் போதையில் இருக்கும் குற்றவாளிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீப காலங்களில் காவல்துறையிடம் இளைஞர்கள் போதையில் அத்துமீறுவது அநாகரிகமாக நடந்து கொள்வது தகாத வார்த்தைகளில் காவல்துறையினரை பேசுவது ஆயுதங்களால் தாக்குவது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது போன்ற வீடியோக்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே குற்ற பின்னணி உள்ளவர்கள் மட்டுமல்லாமல் உயரிய பதவியில் இருப்பவரின் பிள்ளைகளும் போதையில் அத்துமீறி காவலர்களை திட்டுவது தாக்குவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் கடைவீதியில் அரித்துவாரமங்கலம் மேல காலனி பகுதியைச் சேர்ந்த 24 வயதான சூர்யா என்கிற இளைஞர் போதையில் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.சூர்யா கடை வீதியில் நடுவில் நின்று கொண்டு பட்டா கத்தியுடன் அந்த வழியாக வரும் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர் கடைவீதியில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து சூர்யாவின் அலப்பறையை தாங்க முடியாத அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பட்டாகத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட போதை இளைஞர் சூர்யாவை எச்சரித்து பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளார்.இதனால் கோபமடைந்த போதை இளைஞர் சூர்யா கையில் வைத்திருந்த பட்டா கத்தியால் காவலர் மணிகண்டனின் கழுத்தை அறுத்து உள்ளார்.

அதனைத் தொடர்ந்து போதையில் இருந்த சூர்யா அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி இருக்கிறான். இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் கழுத்து அறுபட்ட நிலையில் இருந்த காவலர் மணிகண்டனை மீட்டு உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கண்டிக்க வந்த காவலர் மணிகண்டன் கழுத்து அறுபட்ட சம்பவம் என்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய போதை இளைஞர் சூர்யாவையும் தேடி வந்தனர். மேலும் அரித்துவாரமங்கலம் கடைவீதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர் அதில் போதை இளைஞர் சூர்யா பட்டா கத்தியுடன் வலம் வருவது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தற்போது சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















