பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் பழுதடைந்த குடிநீர் குழாயைச் சீரமைக்கக் கோரிய புகாரால், நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பையே துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி: தீர்வு காண வேண்டிய இடத்தில் இருக்கும் ஒரு நிர்வாகம், பிரச்சினையைச் சரி செய்வதற்குப் பதிலாகப் பிரச்சினையே எழக்கூடாது என்பதற்காக மக்கள் பயன்பாட்டில் இருந்த அடிப்படை வசதியையே பறித்திருக்கும் வினோத சம்பவம் சீர்காழியில் அரங்கேறியுள்ளது. நகராட்சி அலுவலகம் அருகிலேயே நடந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம்: ஒரு பார்வை
சீர்காழி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்குத் தடையற்ற குடிநீர் வழங்கும் நோக்கில், கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. குடியிருப்புகளுக்குத் தனிநபர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள அதே வேளையில், ஏழை எளிய மக்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க பொது இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிடாரி வடக்கு வீதியில் எழுந்த சர்ச்சை
சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ள பிடாரி வடக்கு வீதியில் நீண்டகாலமாகப் பொது குடிநீர் குழாய் ஒன்று மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. நகரின் முக்கியப் பகுதியான இங்குள்ள கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இதுவே முதன்மையான தாகம் தீர்க்கும் மையமாக விளங்கியது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்தக் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு, தண்ணீர் அதிகளவில் வீணாகி வந்துள்ளது. இதனைச் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வராத நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு என்பவர் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து புதிய திருகு (Tap) அமைத்துத் தந்துள்ளார். பொதுநல நோக்கில் செய்யப்பட்ட இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
புகாரால் வந்த வினை: அதிகாரிகளின் 'விசித்திர' தீர்வு
குழாய் சரிசெய்யப்பட்டாலும், அந்தப் பகுதியைச் சுற்றி அடிக்கடி சாக்கடை நீர் சூழ்ந்து கொள்வதும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு, நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்களில் தொடர்ந்து புகார்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.
புகார்கள் சமூக வலைதளங்களில் பரவி நகராட்சி நிர்வாகத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இந்த 'தலைவலியை' நிரந்தரமாகத் தீர்க்க நினைத்த நகராட்சி ஊழியர்கள், அந்த குடிநீர் குழாயால் தான் தண்ணீர் சூழ்வதாக கூறி இன்று காலை திடீரென அந்த இடத்திற்கு வந்து, பொது குடிநீர் குழாயின் திருகைக் கழற்றி எடுத்துச் சென்றனர். அத்துடன் நிற்காமல், குழாய் இணைப்பை 'டம்மி' (Dummy) வைத்து முழுமையாக மூடி, குடிநீர் விநியோகத்தையே துண்டித்துவிட்டனர்.
மக்களின் குமுறல்
"சாக்கடை நீர் தேங்குவதைத் தடுத்து, குழாயைப் பராமரிக்க வேண்டியது நகராட்சியின் கடமை. ஆனால், புகார் கொடுத்தால் இணைப்பையே துண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?" என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில்; "குழாய் உடைந்தால் அதைச் சரி செய்ய வேண்டும். அதை விடுத்து, 'குழாய் இருந்தால் தானே புகார் வரும்' என்று மொத்தமாக இணைப்பைத் துண்டிப்பது ஒரு பொறுப்புள்ள நிர்வாகத்திற்கு அழகல்ல. நகராட்சி அலுவலகம் கண்ணெதிரே இருக்கும் போதே பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை இப்படித் தட்டிப் பறிப்பது கண்டிக்கத்தக்கது," என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
நிர்வாகத் திறமையின்மையா? பழிவாங்கும் நடவடிக்கையா?
ஒரு சிறிய பழுதைச் சரி செய்யத் நிர்வாக திறன் அற்ற நிர்வாகம், ஒட்டுமொத்த இணைப்பையும் துண்டித்திருப்பது அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துவதுடன், அதற்குத் தீர்வாகப் பயன்பாட்டையே முடக்குவது மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரானது எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிடாரி வடக்கு வீதியில் மீண்டும் உடனடியாகக் குடிநீர் குழாய் இணைப்பை வழங்க வேண்டும் என்றும், சாக்கடை நீர் தேங்காத வண்ணம் அந்தப் பகுதியைச் சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும்பட்சத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடவும் மக்கள் ஆலோசித்து வருகின்றனர்.
























