![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தீண்டாமை சுவர் எழுப்பியதா கல்லூரி நிர்வாகம்... இடித்த மக்கள்... அடித்த கும்பல்... நடந்தது என்ன?
கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கிராம மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் மனு.
![தீண்டாமை சுவர் எழுப்பியதா கல்லூரி நிர்வாகம்... இடித்த மக்கள்... அடித்த கும்பல்... நடந்தது என்ன? Salem College accused of setting up an untouchable wall தீண்டாமை சுவர் எழுப்பியதா கல்லூரி நிர்வாகம்... இடித்த மக்கள்... அடித்த கும்பல்... நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/18/040c9a712e21ed78b3dca9af79c85b20_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் அருகே தீண்டாமைச்சுவர் தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழித்தடத்தை மீட்டுத்தர கோரி மனு அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காலனில் இருந்து மேட்டூர் பிரதான சாலைக்கு செல்ல 52 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தர்மலிங்க செட்டியார் என்பவருக்கு சொந்தமான 38 அடி அகலத்தில் 740 அடி நீளம் கொண்ட இடத்தை நடைபாதைக்காக தானமாகப் கொடுத்துள்ளார்.
இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தனியார் கல்லூரி நிறுவனம் ஒன்று அப்பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாதவாறு தீண்டாமை தடுப்பு சுவரை கட்டியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிடர் காலனி மக்கள் இரவோடு இரவாக தடுப்புச் சுவரை இடித்து அகற்றினர். இதனால் மற்றொரு தரப்பினர் இன்று காலை ஆதிதிராவிடர் காலனிக்குள் புகுந்து அப்பகுதி மக்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தீண்டாமை சுவரை கட்ட ஆதரவாக செயல்பட்ட நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய தலைவர் ஜீவானந்தம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் நேரில் சந்தித்து மனு வழங்கினர்.
முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தர்மலிங்க செட்டியார் என்பவர் எங்களுக்கு கொடையாக வழங்கிய சாலையை, 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திவரும் சாலையை தற்போது திடீரென தடுப்பு சுவர் எழுப்பி மாற்றுப் பாதையில் செல்ல சொல்கின்றார்கள் கல்லூரி நிர்வாகத்தினர். அதனால்தான் அந்த சுவரை இரவு நேரத்தில் அகற்றினோம். அதற்காக ரவுடிகளை கொண்டு எங்களது வீடுகளில் புகுந்து பெண்களை தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிக்கலில் எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், கிராமத்து பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்வதற்கு மிகவும் அச்சமாக உள்ளதாக கூறினார். ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களை தனியார் கல்லூரி நிர்வாகம் இழிவு படுத்துவதாகவும். மேலும் ,எங்களுக்குப் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சேலம் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்று கிராம மக்கள் கூறினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)