போலி கையெழுத்து இட்டு கூட்டு சதி - ஏமாற்றப்பட்ட விவசாயி நீதி கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம்...!
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பாளர் கையொப்பத்தை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போட்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார் அளித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பாளர் கையொப்பத்தை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போட்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்தி செய்யப்பட்ட டிராக்டர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அகரஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் 39 வயதான மதன்மோகன். இவர் கடந்த 2019- ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தின் விவசாயக்கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார். கொரோனா தொற்றுக்காலத்தில் தவணை முறையாக செலுத்த முடியாத நிலையில் 2021-ல் மதன்மோகனின் 2 டிராக்டர்களையும் ஜப்தி செய்ததோடு, அவரது கையெழுத்தை போலியாக போட்டு பெயரை மாற்றி டிராக்டரை விற்பனை செய்து மோசடி செய்ததாக மதன்மோகன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர் போராட்டம்
இந்நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கப்படாத நிலையில், 2021- ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதன்மோகன் அவரது தாய் உமாமகேஸ்வரியுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் 2022 -ம் ஆண்டு மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு விஷம்குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்தார்.
அப்போதும் அவருக்கு தீர்வு கிடைக்காத நிலையில், மதன்மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் தனியார் டிராக்டர் நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த மன்மோகன் காவல்துறையினரை கண்டித்து கடந்த 2023 -ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் பேச்சுவார்ததை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டார்.

ஓட்டுநர் பயிற்சி பள்ளி மீது புகார்
இந்நிலையில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பாளர் கையொப்பத்தை பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போட்டு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டி விவசாயி மதன்மோகன் மீண்டும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 08 ம் தேதி அன்று மயிலாடுதுறை சீர்காழி மெயின்ரோட்டில் வடக்கு வள்ளலார் வீதி என்ற முகவரியில் இயங்கி வரும் Easan Farm Meachinery என்ற நிறுவனத்தில் 439 என்ற உழவு டிராக்டரை ஆக்சிஸ் பேங்க் கடன் உதவியில் விலைக்கு வாங்கினேன்.

இந்த வாகனமானது கடந்த 27/09/2019 அன்று மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிரந்தர பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் வழங்கப்பட்டது. இந்த வாகன பதிவில் பதிவிற்கான ஆவணங்களில் வாகன உரிமையாளரின் கையொப்பம் போலியாக இட்டு முன்னுக்கு பின்னான ஆவணங்களை தயார் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எனது கையொப்பத்தை போலியாக இட்டது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட குற்ற பிரிவு காவல் துறையினர் கடந்த 21/03/2023 அன்று Easan Farm Meachinery உரிமையாளர் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் கையெழுத்தை மோசடியாக இட்ட கார்த்திக் ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். விவசாயியை ஏமாற்றி அவரின் வாழ்வாதாரத்தை பறித்து சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக போராடி வரும் விவசாயினை கண்டு பலரும் வருத்தத்தையும் , நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.






















