![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
டிக்கெட் கேட்ட கண்டக்டர்... பளார் விட்ட போலீஸ்காரர்... வெகுண்டு எழுந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள்!
செங்கல்பட்டில் டிக்கெட் கேட்ட நடத்துனரை போலீஸ்காரர் தாக்கியதாக கூறி ஓட்டுநர்கள் ஆஙகாங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![டிக்கெட் கேட்ட கண்டக்டர்... பளார் விட்ட போலீஸ்காரர்... வெகுண்டு எழுந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள்! Chengalpattu: Bus drivers involves in protest after Policemen beats bus conductor asking for ticket டிக்கெட் கேட்ட கண்டக்டர்... பளார் விட்ட போலீஸ்காரர்... வெகுண்டு எழுந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/08/eb69e5570419b822279b9cc1b9b5b5cf_original.gif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செங்கல்பட்டில் டிக்கெட் கேட்ட நடத்துனரை போலீஸ்காரர் தாக்கியதாக கூறி ஓட்டுநர்கள் ஆஙகாங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பேருந்தில் வேலைப்பார்க்கும் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஒரு நாளாவது பிரச்சனை இல்லாமல் வீட்டிற்கு வருவதே அதிசயம் என்ற அளவிற்கு காலகட்டம் மாறி வருகிறது.
மாமல்லபுரம் காவல் நிலையத்தில் 2ஆம் நிலை காவலராக பணிபுரிவர் ஹரிதாஸ். திருக்கழுக்குன்றத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் இவர் வசித்து வருகிறார். இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் மாமல்லபுரம் செல்ல அரசு பஸ் ஒன்று தயராக இருந்தது. அந்த பேருந்தில் வீட்டிற்கு செல்வதற்காக பயணம் செய்ய சாதாரண உடையில் ஹரிதாஸ் அமர்ந்திருந்தார்.
அப்போது பேருந்து நடத்துநர் முருகேசன் என்பவர், காவலர் ஹரிதாசிடம் டிக்கெட் வாங்குமாறு கேட்டதாக தெரிகிறது. அப்போது ஹரிதாஸ் தான் போலீஸ் என்று கூறி டிக்கெட் எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு நடத்துனர் முருகேசன், அடையாள அட்டையை காண்பிக்குமாறு ஹரிதாசிடம் கூறியுள்ளார்.
காவலர் ஹரிதாஸ் தனது அடையாள அட்டையை எடுத்து காண்பித்தபோது அதை நடத்துநர் முருகேசன் தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காவலர் ஹரிதாஸ் நடத்துனர் முருகேசனை தாக்கியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் மற்ற அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு தெரிய வர, அவர்கள் ஆங்காங்கே பயணிகளுடன் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஸ் பச்சாரோ, செங்கல்பட்டு பஸ் டெப்போ கிளை மேலாளர் மாறன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பேருந்துகளை இயக்க ஆரம்பித்தனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்துடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அரசு பேருந்து போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)