பொதுத்தேர்வு நாளை துவங்கும் நிலையில் விருதுநகர் அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை
தினேஷின் பெற்றோர் இன்று வெளியூர் சென்றிருந்தனர், அப்போது தினேஷின் தாத்தா வேலுச்சாமி இன்று காலையில் பேரனை சந்தித்துவிட்டு அவரும் வெளியே சென்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியைச் சார்ந்தவர் முருகேசன் - ஈஸ்வரி தம்பதியினர், முருகேசன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், இவர்களது மகன் தினேஷ் (17) தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் தினேஷின் பெற்றோர் இன்று வெளியூர் சென்றிருந்தனர், அப்போது தினேஷின் தாத்தா வேலுச்சாமி இன்று காலையில் பேரனை சந்தித்துவிட்டு அவரும் வெளியே சென்றுள்ளார்.

பின்பு இரண்டு மணி நேரம் கழித்து அவர் வீட்டிற்கு வந்த பொழுது வீடு திறந்து இருந்தது, அதில் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த தாத்தா கதவை தட்டியுள்ளார், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார், அவர்களின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது தினேஷ் அறையில் தனது தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது, இது குறித்து சூலக்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் .

மேலும் இந்த சம்பவம் குறித்து சூலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், முதற்கட்ட விசாரணையில் நாளை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில் தினேஷ் தனது அறையில் படித்துக்கொண்டு இருந்திருக்கிறார், அப்போது அதிக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது, இதன் காரணமாக இன்று தூக்கிட்டு தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது, இருப்பினும் வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060.
ட்ரெண்டிங் செய்திகள்






















