மேலும் அறிய
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
நகை காணாமல்போன வழக்கை நடத்தி நகை கிடைத்தாலும் அதை போடக்கூடிய மனநிலையில் நான் இல்லை - நிகிதா பேட்டி.

நிகிதா
Source : ABPLIVE AI
அஜித்குமார் கொலை வழக்கில் நகை காணாமல் போனதாக புகார்தாரர் நிகிதா அளித்த புகாரில் சி.பி.ஐ தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு.
சிபிஐ தொடர்ந்த வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரையை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நிகிதா சம்மதம் தெரிவித்த நிலையில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்ட நிலையில் 4 ஆம் தேதி நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக நேரில் ஆஜராகினார். வழக்கு விசாரணையின் போது நிகிதா அளித்த புகாரை முடித்து வைப்பது தொடர்பாக நிகிதா தனது கருத்தை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கோரிய வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு( 9 ஆம் தேதி ) ஒத்திவைத்து உத்தரவிட்ட நிலையில் இன்று தலைமை நீதித்துறை நடுவர் செல்வபாண்டி முன்பாக நிகிதா நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணையின் போது நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை எனவே இந்த வழக்கை முடித்து வைக்கிறோம் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு புகார்தாரர் நிகிதா சம்மதம் தெரிவித்த நிலையில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
நிகிதா செய்தியாளர் சந்திப்பு
பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிகிதா -நிகிதா பேட்டி...,” ஒவ்வொரு அடகு கடைகளிலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நகை இதுவரை ஏன் கிடைக்கவில்லை என்று அவர்களுக்கும், எங்களுக்கும் தெரியவில்லை. நான் புகார் அளித்த அஜித்குமார் தற்போது உயிரோடு இல்லை, எனவே இந்த வழக்கை நடத்தி நகை கிடைத்தாலும் அதை போடக்கூடிய மனநிலையில் நான் இல்லை. என்னுடைய தாய்க்கு வயதாகி விட்டதால் நான் நீதிமன்றம் சென்று அலைய முடியாது. இதன் காரணமாக நகை திருட்டு புகார் தொடர்பான வழக்கை முடித்து வைப்பதாக கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஒப்புக்கொண்டேன். ஒவ்வொரு அதிகாரிகள் அழைக்கும்போது நகை கிடைத்துவிடும் என்று நம்பி தான் வந்தேன். மகாபாரதத்தில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்தது போல், ஒவ்வொரு முறையும் எதிர்பாராத இடங்களில் எல்லாம் தாக்குதல்கள் வந்தது. மகாபாரதத்தில் அபிமன்யு சக்கர வியூகத்தில் உள்ளே செல்வார்கள், ஆனால் வெளியில் வர தெரியாது, அதற்காக அவருடைய தர்மம் பொய் என்று அர்த்தம் கிடையாது. அஜித் குமாரிடம் கார் கொடுத்ததால் அவர் மீது சந்தேகப்பட்டு புகார் கொடுத்தேன். இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டாம் என்னுடைய பணி போய்விடும் என்றும் மூன்று முப்பது மணிக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் நான் கார் கொடுத்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அஜித்குமார் நேரடியாக என்னிடம் சொன்னார். எனவே அந்த நம்பிக்கையும் நகை கிடைத்து விடும் என்று நினைத்தேன். ஆனால் நகை கிடைக்காவிட்டாலும் உயிரை விட அது பெரிதல்ல என்று நினைக்கிறேன்” என்றார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























