Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
Fuel Shortage in India: உலகளவில் என்ன நடந்தாலும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குத் தேவையான சீரான விநியோகம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் அல்லது சமையல் எரிவாயுவுக்கு எங்கும் பற்றாக்குறை ஏற்படவில்லை என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது,
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜி தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்களும், பீதியைத் தூண்டும் கதைகளும் முற்றிலும் ஆதாரமற்றவை. பொதுமக்கள் வதந்திகளை கண்டு பீதியடைய வேண்டாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் தடையற்ற எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் சூழ்நிலைக்கு மத்தியிலும், முன்பு அவ்வழியாக வந்ததை விட அதிகமான கச்சா எண்ணெயை, இந்தியா இன்று உலகம் முழுவதும் உள்ள தனது 41-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்று வருகிறது.ஒவ்வொரு சுத்திகரிப்பு ஆலையும் 100%க்கும் அதிகமான பயன்பாட்டில் இயங்கி வருவதாகவும், அடுத்த 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. எனவே விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் இல்லை. இந்தியாவிடம் 6 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது என்ற செய்திகளில் உண்மையில்லை. மேற்காசிய போர் தொடங்கி 27வது நாளுக்குப் பிறகும் கூட, இந்தியாவில் மொத்தம் 74 நாட்களுக்கான கையிருப்புத் திறன் இருக்கிறது.
உலகளவில் என்ன நடந்தாலும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குத் தேவையான சீரான விநியோகம் உள்ளது எனவும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களைச் சுத்திகரிப்பதில் உலகின் 4வது பெரிய நாடாகவும், 5வது பெரிய ஏற்றுமதியாளராகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியா உலகிற்கு நிகர ஏற்றுமதியாளராக இருப்பதால், உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பது கட்டமைப்பு ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சில்லறை எரிபொருள் நிலையங்கள் கட்டுபாடின்றி இயங்கி வருகிறது.
அதேபோல் சமையல் எரிவாயு பற்றாக்குறையும் ஏற்படவில்லை. எல்பிஜி கட்டுப்பாட்டு உத்தரவைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி 40% அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்திக்கு மேலாக, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் இருந்து 800 டிஎம்டி உறுதிசெய்யப்பட்ட உள்வரும் எல்பிஜி சரக்குகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இதனால் ஒரு மாதத்திற்குமான விநியோகம் உறுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து வர்த்தக சிலிண்டர் ஒதுக்கீடு 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பீதி காரணமாக சிலிண்டர் தேவை 89 லட்சம் சிலிண்டர்களாக உயர்ந்திருந்த நிலையில் தற்போது 50 லட்சமாக குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது, பொருந்தக்கூடிய சட்டங்களின்படி ஒரு குற்றமாகும். வேண்டுமென்றே பீதியை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.























