Union Budget 2025: இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர் - 16 மசோதாக்கள், யாருக்கு தாக்கம்? நல்ல சேதி இருக்கா?
Union Budget 2025: மத்திய அரசின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

Union Budget 2025: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மக்களவையில் நடைபெற உள்ள இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தனித்தனியாக தாக்கல் செய்வார். சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
முதல்கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதி வணிகம் தவிர, 16 மசோதாக்களை தாக்கல் செய்ய அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக , பட்ஜெட் முன்மொழிவுகளை ஆய்வு செய்வதற்காக மார்ச் 10ஆம் தேதி மீண்டும் கூடி ஏப்ரல் 4ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:
முன்னதாக நேற்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், எதிர்க்கட்சிகள், அரசு, நாடாளுமன்ற குழுக்களை அரசியல் ஆக்குவதாகவும், பெரும்பான்மையை பயன்படுத்தி, தன் நிகழ்ச்சி நிரலை முன்வைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டின. அதோடு, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறு மஹா கும்ப மேளாவை தவறாக நிர்வகித்தததன் காரணமாகவே, கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் உயிரிழந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருவதால், ஜனவரி 31ஆம் தேதியன்று நாடாளுமன்ற கூட்டத்தில் விவாத அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமர்பிக்கப்பட உள்ள 16 மசோதாக்கள்:
பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்டியலிடப்பட்டுள்ள 16 மசோதாக்களில் வக்ஃப் (திருத்தம்) மசோதா, வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, ரயில்வே (திருத்தம்) மசோதா, பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, விமானப் பொருள்கள் மசோதா மற்றும் குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் மீதான நலன்களைப் பாதுகாக்கும் மசோதா ஆகியவை அடங்கும். 16 மசோதாக்கள் தவிர, பட்ஜெட் அமர்வின் போது சமர்ப்பிக்கப்படும் நிதி வணிகம் பின்வருமாறு:
- 2025-26 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்/திரும்பப் பெறுதல்
- 2024-25 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகளின் இரண்டாம் மற்றும் இறுதித் தொகுதி மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்/திரும்பப் பெறுதல்
- 2021-22 ஆம் ஆண்டிற்கான அதிகப்படியான மானியங்களுக்கான கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்/திரும்பப் பெறுதல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

